விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?

37

திருப்பூர்: திருப்பூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய 'ரோடு ஷோ' வில் திரண்ட கூட்டம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கொங்கு மண்டலம், பொதுவாக, அ.தி.மு.க.வின் கோட்டை என்ற ஒரு அடையாளம் இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு நேரடி போட்டி, தி.மு.க. தான். தேர்தல் திருவிழாவின் போது, இரு கட்சியினர் சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்றவற்றுக்கு, சாரை சாரையாக வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்படுவர். அவர்களுக்கு உணவு, குடிநீர், பணம் என அனைத்தும் கட்சியின் உபயம் தான்.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம், அவிநாசி மற்றும் பெருமாநல்லுாருக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி வழியாக பெருமாநல்லுார் வந்த அவருக்கு வழிநெடுகிலும் கட்சியினரும், ரசிகர்களும் கரைபுரளும் உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்தனர். பெருமாநல்லுார் சந்திப்பு சாலை துவங்கி, பூலுவப்பட்டி வரை 'ரோடு ேஷா' நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெருமாநல்லுார் சந்திப்பில் பிரசாரம் செய்த அவர், 'ரோடு ஷோ'வை ரத்து செய்து, திரும்பினார். இதனால், அந்த சாலை முழுக்க பரவியிருந்த கட்சியினரும், ரசிகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tamil News
Tamil News
Tamil News

ஏறத்தாழ, 5 மணி நேரத்துக்கும் மேலாக, சுட்டெரிக்கும் வெயில் குழந்தைகளுடன் காத்துக்கிடந்த தொண்டர்கள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். காலை முதலே இச்சாலை முழுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ரோடு ேஷா ரத்து செய்யப்பட்டது, அவர்கள் மத்தியிலும் 'உழைப்பு வீணாணதே...' என்ற ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கொங்கு மண்டலத்தில், அதுவும் நகரப்பகுதி அல்லாத பெருமாநல்லுார், அவிநாசியில் விஜயை பார்க்க திரண்ட கூட்டம், சற்றே மிரளத்தான் செய்திருக்கிறது. இந்த கூட்டத்தை, 'ரசிகர் பட்டாளம், சினிமா பிரியர்கள்' என பலரும், பலவாறு விமர்சிக்க தான் செய்கின்றனர். ''எதுக்காக விசிலுக்கு ஓட்டுப்போட போறீங்க...'' என்ற கேள்விக்கு, ''விஜய் கட்சிங்க. அவ்வளவு தான்'' என ஒற்றை வரி பதில் மட்டுமே அவர்களிடம்.

பிற கட்சியினர், காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் நிலையில், தங்களது சொந்த காசை செலவழித்து வந்து சென்றிருக்கிறது, இந்த பெருங்கூட்டம். ஒவ்வொரு கட்சியிலும், கட்சி சார்பிலேயே கட்சித்துண்டு, சின்னம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் நிலையில், இங்கு நிலைமை தலைகீழ். கட்சித்துண்டு, 50 ரூபாய், விசில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்தவாறு, ஏராளமானோர் வழிநெடுகிலும் நின்றிருந்தனர்; கட்சியினரும் காசு கொடுத்து அவற்றை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.

கூட்டத்தில், பிரசார வாகனம் மீது ஏறி நின்ற விஜய், நேராக வாக்குறுதிகளை வாசிக்க துவங்கினார். மாறாக, கட்சி நிர்வாகிகளின் பெயரை சொல்லி 'அவர்களே... இவர்களே' என, அரசியல் 'சம்பிரதாயத்தில்' நேரத்தை கரைக்கவில்லை. தொகுதியில் போட்டியிடும், 8 வேட்பாளர்கள் அங்கிருந்தும் வேட்பாளர்களை கூட தனித்தனியாக பெயர் சொல்லி அறிமுகம் செய்யவில்லை. 'தனது முகம், விசில் என்கிற சின்னம்' இது மட்டுமே, அவரது பிரசார ஆயுதமாக இருந்தது. வேட்பாளர்களுக்கு இது, மனதோரம் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், 'சகித்து தானே போக வேண்டும்...' என கடந்து போயினர்.

'இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா...?' என்பதே, இப்போதைய பேசு பொருள்.

Advertisement