தேசிய கட்சிகளுக்கு தமிழகம் பொருட்டில்லையா?

24

பத்ரி சேஷாத்ரி, எழுத்தாளர்


bseshadri@gmail.com
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தி.மு.க.,விற்கு அடுத்து காங்கிரசுக்கு தான் அதிக இடங்கள். ஆனால், காங்கிரசின் பிரசாரம் உங்கள் கண்களில் இதுவரை பட்டுள்ளதா?

பக்கத்திலேயே உள்ள புதுச்சேரிக்கு, ராகுல் வந்திருந்தார். ஆனால், தமிழகத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதே நாளில் புதுச்சேரி சென்றிருந்த ஸ்டாலினையும் பார்க்கவில்லை. கேரளத்துக்கும் ராகுல் சென்றார். விமானம் ஏற தமிழகத்துக்கு வந்தவர் இங்கே பிரசாரம் செய்யவில்லை. பிரியங்காவும் ராகுலை பின்பற்றினார். சோனியாவின் உடல்நலம் சரியில்லை என்பதால் அவர் எங்குமே செல்லவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் தமிழகத்துக்குப் பிரசாரம் செய்ய வரவில்லை. கூட்டணியை ஏற்படுத்த பலமுறை வந்து சென்ற கிரீஷ் ஷோடங்கர், கே.சி.வேணுகோபால் போன்ற யாரும், இதுவரை பிரசாரம் செய்ய வரவில்லை. கர்நாடகத்தின் துணை முதல்வர் சிவகுமார் மட்டும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட தமிழகம் வந்தார்.

உள்ளூர்க்காரரான ப.சிதம்பரம், கூட்டணிக்காக ஸ்டாலினை நேரில் சந்தித்தார். ஆனால், பெரும் பிரசார கூட்டம் எதிலும் அவரை இதுவரை பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சி, தாங்கள் நிற்கும் தொகுதிகளில் கூட பெருங்கூட்டம் எதையும் இதுவரையில் ஏற்பாடு செய்யவில்லை.

மாறாக, தி.மு.க., கூட்டணியின் மற்ற தலைவர்களான தே.மு.தி.க., - பிரேமலதா, வி.சி.க., - திருமாவளவன், ஏன்... வைகோ முதற்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் களத்தில் மிகக் கடுமையாக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை அம்பேல் என்று விட்டுவிட்டனரா? அப்படியென்றால், எதற்காக அவ்வளவு போராடி எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றே தீருவோம் என்று சண்டை போட்டனர்? தொகுதிகளை பெறும் முன் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர்?

சரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.,வின் நிலை என்ன என்று பார்ப்போம். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., -27 தொகுதிகளை பெற்று, அணியில் அதிக இடங்களை பெற்ற இரண்டாவது கட்சியாக உள்ளது.

பிரதமர் மோடி, ஜனவரி முதல் மூன்று முறை தமிழகம் வந்துவிட்டு போய்விட்டார். நேற்று நாகர்கோவில் வந்தார். அமித் ஷா ஒரு புதிர். தேர்தல் கூட்டணிக்காக தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர், திடீரென மேற்கு வங்கம் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டார்.
Latest Tamil News
தமிழகத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் நட்டா, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட தமிழகம் வந்தார். கட்சியின் புதிய தலைவர் நிதின் நபின் தமிழகத்திற்கு வந்தால், அவர் யாரென்றே இங்கு யாருக்கும் தெரியாது. பீயூஷ் கோயல் வேலை, கூட்டணி தொகுதி பங்கீட்டோடு முடிந்துவிட்டது.

பா.ஜ.,வுக்கு ஒரு துருப்பு சீட்டு அண்ணாமலை. அவர் ஊர் ஊராக போய், அ.தி.மு.க., பழனிசாமிக்கு இணையாக பிரசாரம் செய்கிறார். ஆனால், காங்கிரசுக்கு ஒருபோதும் சளைத்ததல்ல என்பது போல பா.ஜ., நடந்துகொள்கிறது. எந்த தேவையுமே இல்லாமல், தமிழக தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு என சிறப்பு லோக்சபா அமர்வை கூட்டுகின்றனர்.

சரி, அப்படி செய்தால் தமிழகத்தில் ஜெயிக்கலாம் என்றால், அறம் முறம் என்று பேசாமல், கட்சிக்கும் கூட்டணிக்குமாவது ஏதேனும் லாபம் கிடைக்கிறதே என்று சந்தோஷப்படலாம். ஆனால் யாருடைய அறிவுரையை கேட்டனரோ தெரியவில்லை, தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை களத்தில் இறக்குகின்றனர்.

இங்கே, பிரசாரத்தில் பலத்த அடிவாங்கிக் கொண்டிருந்த தி.மு.க., படாரென்று எழுந்து நிற்கிறது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படும் என்ற பிரசாரத்தை தி.மு.க., கூட்டணி கையில் எடுத்துவிட்டது. என்ன நடக்கப்போகிறது என்ற தெளிவு இல்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் உண்மை முக்கியமல்ல. பிரசாரம் தான் முக்கியம். பழனிசாமியும் அண்ணாமலையும் தெருத்தெருவாக போய் சாதித்துக் கொண்டு வந்ததை, இந்த தொகுதி மறுவரையறை மசோதா ஒரே அடியில் ஒழித்துக் கட்டிவிடக்கூடும்.

பா.ஜ.,வின் திட்டம் தான் என்ன? தமிழக தேர்தல் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைக்கின்றனரா? என்ன செய்வதாக இருந்தாலும், 10 நாள் கழித்து செய்தால் குடிமுழுகிப் போய்விடுமா என்ன?

தமிழகம் உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்கும் மாநிலம். தி.மு.க., தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒருசேர முழங்க ஆரம்பித்துவிட்டன. த.வெ.க., விஜயும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.

ஒரு கட்சி, ஒன்றுமே செய்யாமல் தன் வாய்ப்புகளை கெடுத்துக்கொள்கிறது. இன்னொரு கட்சி, தேவையில்லாத பல செயல்களை செய்து தன் வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ளப் பார்க்கிறது.

ஆக, இருவருக்குமே தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது!

Advertisement