ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு வீட்டு உரிமையாளர்கள் புகார்

சென்னை: 'தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், குடிநீர் கட்டணத்தை, ஓசையின்றி உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன' என, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2022ல் நிலங்களுக்கான சொத்து வரி, 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆண்டுக்கு 6 சதவீதம், சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்து, 2024ல் அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சிகள், சொத்து வரியை உயர்த்தி வருகின்றன. இதன் அடிப்படையில், குடிநீர் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.

மீட்டர் தமிழகத்தில், சென்னை தவிர்த்து, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், தமிழக குடிநீர் வடிகால் வாரிய விதிகளின்படி, வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் அடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் மீட்டர்கள் சரியாக செயல்படவில்லை.

எனவே, சொத்து வரி மதிப்பில், 1.5 சதவீதம் என்ற அடிப்படையில், குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என்றால், மாநகராட்சி அல்லது நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், அதை செய்யாமல், தன்னிச்சையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

உதாரணமாக, சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில், மாதம், 100 ரூபாய் என்ற அடிப்படையில், காலாண்டுக்கு 300 ரூபாய் என, குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சமீபத்தில், மாதம், 150 ரூபாய் என, கட்டணம் உயர்த்தப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

'ஆன்லைன்' முறையில், குடிநீர் கட்டணம் செலுத்த சென்றவர்கள், கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பே, கட்டண உயர்வு விபரம் மக்களுக்கு தெரியவந்தது.

தானியங்கி முறை இதுகுறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தெரியாமல், அதிகாரிகள் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில், 100 ரூபாயாக இருந்த மாத கட்டணம், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தோம்.

இதையடுத்து, கட்டணம் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. சொத்து வரி மதிப்பு அடிப்படையில் தானியங்கி முறையில், அதிகாரிகள் கட்டண உயர்வை அமல்படுத்துவது தவறு.

சொத்து வரி உயர்வு முறையாக இல்லை என, புகார் கூறப்படும் நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, தனியார் மயத்துக்கான நடவடிக்கையாக தெரிகிறது. பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், கட்டண உயர்வு விகிதங்கள் குறித்து விபரங்களை திரட்டி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நகராட்சி, மாநகராட்சிகளில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சில மாநகராட்சி நிர்வாகங்கள், தாங்களாக கட்டண உயர்வை அமல்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எதன் அடிப்படையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement