யோகேஷ் கவுடா கொலை வழக்கு தீர்ப்பு சத்தியத்துக்கு அழிவில்லை: சி.பி.ஐ., வக்கீல்கள்

பெங்களூரு: ''சத்தியத்துக்கு சாவில்லை. இது சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி,'' சி.பி.ஐ., தரப்பு வக்கீல்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

யோகேஷ் கவுடா கொலை வழக்கு தீர்ப்பு வெளியான பின், சி.பி.ஐ., தரப்பு வக்கீல்கள் அளித்த பேட்டி:

சத்தியத்துக்கு சாவு இல்லை. இது சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாகும். யோகேஷ்கவுடா கொலை வழக்கை விசாரணை நடத்திய மாநில போலீசார், முக்கியமான குற்றவாளிகளின் பெயர்களை அகற்றிவிட்டு, மற்றவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

அதன்பின் அந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு எதிரான சாட்சிகளை திரட்டினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இது வரலாற்று தீர்ப்பாகும். கண்ணால் கண்ட சாட்சிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், போன் டவர் லொகேஷன் மற்றும் சி.டி.ஆர்.,கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க, உதவியாக இருந்தன.

முதலில் தார்வாட் போலீசார், வெறும் ஐந்து பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் சி.பி.ஐ., விசாரணை நடத்திய பின், வினய் குல்கர்னியின் அரசியல் விரோதமே, கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்து, 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வினய் குல்கர்னி, மற்ற குற்றவாளிகளுடன் நிரந்தர தொடர்பில் இருந்துள்ளார். பணமும் கொடுத்துள்ளார்.

ஆயுள் தண்டனை என்றால், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின், விடுதலையாவார் என்ற அர்த்தம் அல்ல. மாறாக உயிர் இருக்கும்வரை, தண்டனை அனுபவிக்க வேண்டும். 14 ஆண்டுக்கு பின், இவர்களை விடுதலை செய்வது பற்றி முடிவெடுக்க, அரசுக்கு வாய்ப்பு இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.....புல் அவுட்....

நான் பத்து ஆண்டாக பட்ட கஷ்டத்துக்கு, நியாயம் கிடைத்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். என் கணவரின் இடத்துக்கு, என் மகன் வர வேண்டும். அவரை தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் என் கணவரின் ஆத்மாவுக்கு, அமைதி கிடைக்கும். எங்களுடையது காதல் திருமணம். என் கணவர் வீட்டினரோ, என் தாய் வீட்டினரோ உதவிக்கு வரவில்லை. தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் அரசியலுக்கு வருவதை விட, என் பிள்ளைகள் வந்தால் மகிழ்வேன்.

- மல்லம்மா, யோகேஷ்கவுடாவின் மனைவி

Advertisement