'ஹிந்து மதத்தை ஏய்ப்பவர்களுக்கு வேட்டு'

16

@block_B@ ராம.ரவிக்குமார் - நிறுவன தலைவர், ஹிந்து தமிழர் கட்சிblock_B

தமிழக அரசு, தன்னை 'மதச்சார்பற்ற அரசு' என்று சொல்லிக் கொள்கிறது. அனைத்து மதங்களுடைய வழிபாட்டு உரிமைக்கும் உணர்வுகளுக்கும் சம மதிப்பளிப்பதே உண்மையான மதச்சார்பற்ற அரசின் கடமை. ஆனால், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மிதித்துக்கொண்டே, தங்களை மதச்சார்பற்ற அரசு என, இரு திராவிட கட்சிகளின் அரசுகளும் சொல்கின்றன.

திராவிட அரசுகளால், ஹிந்துக்களுக்கு எத்தனையோ அநீதி இழைக்கப்படுகிறது. அவற்றில், சிலவற்றையாவது, ஹிந்து வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசின் அத்துமீறல்




ஹிந்து சமய அறநிலைய துறையின் கீழ் 40,000க்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் இருந்தாலும், 10,000க்கும் மேற்பட்ட கோவில்களை பட்டியலில் காணாமல் போக செய்தது தான் இத்துறையின் பெரும் சாதனை. மன்னர்களும் முன்னோர்களும் கட்டிவைத்த கோவில்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கு, அறநிலைய துறை அதிகாரிகளே மறைமுகமாக உதவினர். பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு சொத்துக்களை மீட்டுவிட்டு, இப்போது நாங்கள் தான் மீட்டோம் என்று மார்தட்டிக் கொள்வது மடத்தனத்தின் உச்சம். ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

திருக்கோவில் சொத்துக்களில் ஆட்சியர் அலுவலகம், பள்ளிகள் என அரசு திட்டங்களை நிறைவேற்றிட நிலங்களை எடுத்துக் கொள்வதும் எந்த வகையில் நியாயம்? தமிழக அரசின் தேவைக்காக சர்ச், மசூதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு கோவிலுக்கும் அந்தந்த திருக்கோவிலில் உள்ள இறைவன் -- இறைவியே உரிமையாளர் தவிர, தமிழக அரசோ தனிநபர்களோ கிடையாது. பக்தர்கள் உண்டியலில் போடும் பணம், அந்தந்த திருக்கோவில் மேம்பாட்டிற்கு தானே தவிர, அரசின் பொது தேவைக்கு அல்ல.

ஆனால், ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்சார துறை, போக்குவரத்து துறை ஆகியவற்றில், கோவில் காணிக்கை பணத்தை முதலீடு செய்வதும், கல்யாண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதும் முறையா? இதுபோன்று கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய நிறுவனங்களில் இருந்து வருமானத்தை எடுத்து அரசு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று தமிழக அரசு இதுவரை செய்திருக்கிறதா என, நீதிமன்றமே பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது.

முரண்பாடுகள்




நாயன்மார்களும் ஆழ்வார்களும் போற்றி வளர்த்தது தெய்வத் தமிழ். இவர்களுடைய அவதார தினங்களில் அன்னதான திட்டமோ, சிறப்பு வழிபாடுகளோ செய்யாத அரசு, ஹிந்து சமயத்தை கேவலமாக பேசிய அண்ணாதுரை நினைவு நாளுக்கு கோவில்களில் தெவசச் சோறு போடுகிறது. இதேபோல மசூதியிலோ, சர்ச்சிலோ சிறப்பு வழிபாடு நடத்தி, தெவசச் சோறு போட முடியுமா?

தேவாரம், திவ்ய பிரபந்தம் பாடப்பட்ட கோவில்களை அரசு பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், அதிக வருமானம் தரும் 'உண்டியல் லிங்கங்கள்' மீது மட்டும் பாசமழை பொழிந்து வருமானத்தை எடுத்துக் கொள்கிறது. தேவாரக் கோவில்களை, வியாபாரக் கோவில்களாக மாற்றிவிட்டது இந்தத் திராவிட மாடல் அரசு.

உபயதாரர்களின் கோடிக்கணக்கான பணத்தில் திருக்கோவில் வேலைகளை பூர்த்தி செய்துவிட்டு, உபயதாரர்களின் பெயர்களை எங்கும் குறிப்பிடாமல் மறைக்கும் அரசு, ஒரு ரூபாய் கூட தராத முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை கல்வெட்டுகளில் இடம்பெறச் செய்வது என்ன நியாயம்?

உண்மையும் நாடகமும்




'ஈ.வெ.ரா.,வின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்திட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியது திராவிட மாடல் அரசு' என்று மார்தட்டுகின்றனர். சரி, எத்தனை சர்ச்சுகளில் அனைத்து ஜாதியினரையும் பாதிரியாராக நியமித்தீர்கள்? எத்தனை மசூதிகளில் அனைத்து ஜாதியினரையும் முல்லா, மவுலவிகளாக நியமித்தீர்கள்? இங்கெல்லாம் ஈ.வெ.ரா.,வின் நெஞ்சில் முள் தைக்கவில்லையா?

ஹிந்து கோவில்களில் 'அன்னை தமிழில் வழிபாடு' என துணிச்சலாக அரசாணை வெளியிடும் தமிழக அரசு, மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் அன்னை தமிழில் வழிபாடு என அரசாணை போடாதது ஏன்? ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சிடப் பல மெட்ரிக் டன் அரிசி வழங்கும் தமிழக அரசு, ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சும் விழாக்களுக்கு ஒரு கிலோ அரிசியோ கம்போ வழங்கியதாக வரலாறு உண்டா?

ஓரவஞ்சனை




திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, அரசு ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு திருவிழாவிற்கு காவல் பாதுகாப்புடன் மலை மீது ஏறி, திருக்கோவிலின் தலவிருட்சமான கள்ளத்தி மரத்தில் இஸ்லாமிய பிறை கொடி கட்டியபோது, அமைதியாக இருந்த அரசு, நீதிமன்ற உத்தரவுபடி ஐந்து ஹிந்துக்கள் மலையில் ஏறி தீபம் ஏற்ற முயன்றபோது, அதை தடுத்து, மேல்முறையீடு செய்தது ஏன்? ரம்ஜான் நோன்பு சமயத்தில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த அனுமதித்தது யார்?

மரத்தை வெட்டுவதற்கு கோடரிக்காம்பாக செயல்படும் மரக்கிளைகளை போல, மத துரோகிகளின் செயல்பாட்டால், ஹிந்து சமயமும் திருக்கோவில் வழிபாடும் அழிந்துவிடும் என்று அவர்கள் பகல் கனவு காண்கின்றனர். எந்த சூழலிலும், ஒவ்வொரு ஹிந்துவும் தாய் சமயத்தை, தாய் மொழியை, கோவில் வழிபாட்டை காத்திட பக்தியோடு ஒன்றிணைந்து வலிமையாக செயல்பட வேண்டும். ஹிந்து மதம் காப்பவர்களுக்கு ஓட்டு போடுவோம்; ஹிந்து மதத்தை ஏய்ப்பவர்களுக்கு வேட்டு போடுவோம். அதுவே சரியான தீர்வாக அமையும்!

ramaravi07779@gmail.com

Advertisement