கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி

பீதர்: சாலையில் நடந்து சென்ற போது, வெயில் தாக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டதில் வட மாநில வாலிபர் உயிரிழந்தார்.

பீதர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக காணப்படுகிறது. இதனால் முதியோர், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் முகமது சமீர், 20. இவர் பீதர் கமலாநகரில் உள்ள சலுான் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர், திக்கி கிராமத்துக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் நடந்து சென்றார்.

சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றதால், அவருக்கு லேசாக தலை சுற்றியது. இதனால், அவர் அப்பகுதியில் இருந்த 'பஞ்சர்' கடைக்கு சென்று, அங்கு தண்ணீர் வாங்கி குடித்தார்.

அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு மீண்டும் கிராமத்தை நோக்கி நடந்தார். திடீரென அவர் தலை சுற்றி கீழே விழுந்தார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு துடித்தார். பின், அவர் உயிரிழந்தார்.

சாலையின் ஓரத்தில் மனித உடல் கிடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கமலாநகர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மு தல் கட்ட விசாரணையில், வெயிலின் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டத்தில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement