நாளை நமதே... நதி நீர் இணைந்தால் மட்டுமே!

நதி எங்கே போகிறது... கடலைத் தேடி... என்ற திரைப்பாடல் வரிகள், இன்று விவசாயிகளின் கண்ணீர் வரிகளாக மாறிவிட்டன. ஒருபுறம் கடலில் கலக்கும் உபரி நீர்; மறுபுறம் தண்ணீரின்றித் தவிக்கும் தரிசு நிலங்கள்.

இந்த இடைவெளியைக் குறைக்க, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் முதல்வர் நதிநீர் இணைப்புத் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்ற குரல் திருப்பூரிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது.

சக்கரங்களில் ஒரு சரித்திரம் நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற கனவுடன், கடந்த 2006-ம் ஆண்டே தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணித்து 30 ஆயிரம் கையெழுத்துகளைத் திரட்டியவர் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ரகுநாதன், 62. பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டாலும், நதிநீர் இணைப்புக்காக அவர் துடித்த இதயம் இன்றும் அதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உடல் நலம் குன்றினாலும், ஒவ்வொரு முறையும் புதிய அரசு அமையும்போது நதிநீர் இணைப்பை ஒரு கடமையாகவே வலியுறுத்தி வருகிறார். தற்போது சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், தமிழகத்தின் 5.67 கோடி வாக்காளர்களின் உணர்வாக, நதிநீர் இணைப்புக்கான சிறப்புச் செய்தி மடல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வெப்பமயமாதலும் விலைவாசி உயர்வும் 2050-ல் உச்சத்தைத் தொடும். அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடிய ஒரே கேடயம் நதிநீர் இணைப்புதான், என்கிறார் ரகுநாதன். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே விவசாயத்தையும், செழிப்பான தமிழகத்தையும் மீட்டெடுக்க முடியும் என்பது அவரது ஆணித்தரமான நம்பிக்கை.

கடைசி நம்பிக்கை திருப்பூர் வி.ஜி.வி. நகரில் வசிக்கும் அவர் மேலும் கூறுகையில், அதிக அளவு தண்ணீரை வீணாகக் கடலுக்கு அனுப்பிவிட்டு, பாசனத்திற்குத் தவிப்பது வேதனையானது. புதிதாகப் பொறுப்பேற்கும் முதலமைச்சர், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement