ராமேஸ்வரத்தில் இரண்டு நாளாக குடிநீர் நிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி தெருக் குழாய்களில் இரு நாட்களாக குடிநீர் நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகளில் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் குழாய்களில் காவிரி குடிநீரை நகராட்சி வினியோகம் செய்கிறது. இந்த குடிநீரை இரு நாட்களுக்கு ஒரு முறை விநியோகித்து வந்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் திட்டக்குடி தெரு, வர்த்தகம் தெரு, நகைக்கடை பஜார் உள்ளிட்ட பல தெருக்களில் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தனியார் வாகனத்தில் குடம் ரூ. 10க்கு வாங்கி தாகம் தணித்தனர்.குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும், இன்று முதல் குடிநீர் விநியோகிக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement