இழப்பீடு அறிவிக்காமல் பட்டா நிலத்தில் சாலை அமைப்பதாக புகார்

அன்னூர்: இழப்பீடு குறித்து தெரிவிக்காமல் தன்னிச்சையாக தங்களுடைய நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை அமைப்பதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், ஆட்டையாம்பாளையம் முதல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி 2025 பிப்., முதல் நடைபெற்று வருகிறது.

238 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பணியில், கஞ்சப்பள்ளி, ஒட்டர் பாளையம், பொங்கலூர், வடவள்ளி, பள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் அன்னூர் பேரூராட்சியை சேர்ந்த சாலையோர நில உடமை தாரர்களின் நிலங்களை சாலை அகலப்படுத்த கையகப்படுத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களுக்கு சந்தை விலையில் இருந்து இரண்டு மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் துறை அதிகாரிகள் இது குறித்து அடுத்த கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்படும். காலியிடம், கட்டிடம், மரங்கள் என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தொகை என்பது நிர்ணயித்து அறிவிக்கப்படும்.

அதன் பிறகு தான் உங்கள் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒட்டர்பாளையம், பொகலூர் ஊராட்சிகளில் அனுமதி இன்றி பட்டா நிலத்தில் சாலை அமைப்பதாக புகார் எழுந்துள்ளது.

பொகலூர் ஊராட்சி மக்கள் கூறுகையில், 'எங்களுக்கு சொந்தமான இடத்தில் எங்கள் அனுமதி பெறாமல் சாலை அமைத்து வருகின்றனர். மின் கம்பங்களை நடுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும் நடவடிக்கை இல்லை.

அரசு சந்தை விலையில் இருந்து குறைந்தது இரண்டு மடங்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயித்து வழங்கிய பிறகு எங்களுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement