சோதனைக்கு வந்த அதிகாரிகளை கண்டுபிடிக்கணும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை

54


சென்னை: வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கான ஆதாரத்தை இன்று வெளியிடுவதாக கூறியிருந்த செல்வப்பெருந்தகை, ''என் வீட்டில் சோதனை என்ற பெயரில் அட்டூழியம் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என இன்று தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்கு, தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது, தன்னை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காக, தன் வீட்டில் வருமான வரி சோதனையை நடத்துவதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறி இருந்தார். இதற்கு, வருமான வரித்துறை தரப்பில் மறுப்பு வெளியிட்டதோடு, காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. 'வருமான வரி சோதனை விவகாரம் தொடர்பாக, என் தரப்பு ஆதாரங்களை, இன்று வெளியிடுவேன்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.




அதன்படி இன்று நிருபர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியிருந்தாவது: கடந்த வாரம் ராகுல் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் வந்து இருந்தார். அந்த கூட்ட ஏற்பாடுகளை நான் செய்து இருந்தேன். நெருக்கடி வந்தது. நாங்கள் எல்லா நெருக்கடிகளையும் கடந்த 12 ஆண்டுகளாக பார்த்து கொண்டிருக்கிறோம். இரண்டாம் கட்ட பிரசாரத்திற்கு ராகுல் வருவது உறுதி செய்யப்பட்டது. எனது வீடு குக்கிராமம். சிசிடிவி என்ற பேச்சுக்கே அந்த கிராமத்தில் வாய்ப்பு இல்லை.


எனது வீட்டிற்கு வெளியே எங்கிருந்து அதிகாரிகள் வந்தனர்?, சோதனை என்ற பெயரில் அட்டூழியம் நடத்தி இருக்கின்றனர். திமுக நிர்வாகி படைப்பை மனோகரன் வீட்டில் எனது தேர்தல் அலுவலகம் இருந்தது. அங்கு வந்த அதிகாரிகள் சோதனை செய்வதற்கு முன் சிசிடிவியை முதலில் ஆப் செய்தார்கள். ஜனநாயக முறையில் சோதனை என்றால் ஏன் சிசிடிவிகளை ஆப் செய்தீர்கள். சோதனை என்கிற பெயரில் பணம் எங்கே என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.


சோதனைக்கு வந்த அதிகாரிகள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை நடத்துவது தப்பு கிடையாது. உண்மையை மறைப்பது ஏன்? படப்பை மனோகரன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வே ட்பாளர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் என எத்தனை பேரிடம் வருமான வரி சோதனை நடத்தினீர்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

தினமலர் நேரலை




வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை என கூறிய நிலையில், ஐடி சோதனை நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரத்தை, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.


முழு பேட்டி, வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement