ரூபாய் வீழ்ச்சிக்கு சர்வதேச சூழல் காரணம்

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக சரிந்து 94 ரூபாய் என்ற எல்லையை தாண்டியுள்ளது. உள்நாட்டு காரணிகளை விட சர்வதேச சூழலே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மேற்காசியாவில் கப்பல்கள் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை தாண்டியுள்ளது. எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் இந்தியாவிற்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், கடல்சார் முற்றுகைகள் தொடர்வதால் விநியோக சங்கிலியில் பாதிப்பு நீடிக்கிறது. இதனால் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

அமெரிக்க டாலர் குறியீடு 98 என்ற அளவில் வலுவாக உள்ளது. அந்நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் 2026 இறுதி வரை மிக குறைவாகவே (25%) உள்ளது. இது டாலருக்கான தேவையை அதிகரித்துள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை தேடுகின்றனர். இந்திய பங்கு சந்தையிலிருந்து ஒரே நாளில் 2,078 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன.

இதுபோன்ற காரணங்களால், தொழில்நுட்ப ரீதியாக, ரூபாய் மதிப்பு 94ஐ தாண்டியுள்ளதால் தற்போதைய அழுத்தம் தொடர வாய்ப்புள்ளது. புதிய காரணிகள் ஏதும் உருவாகாத பட்சத்தில், வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு 93.50 முதல் 94.50 என்ற எல்லைக்குள் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement