மாவட்டத்தில் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு..85.19 சதவீதம் . இளைஞர்கள் ஆர்வத்தால் தேர்தல் முடிவில் மாற்றம்?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நேற்று மாலை 6:00 மணி வரை, 14 லட்சத்து 22 ஆயிரத்து 816 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இதன் மூலம், தேர்தல் முடிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுமென பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 7 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.

மாவட்டத்தில் உள்ள 2,165 ஓட்டுப்பதிவு மையங்களில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மேற்பார்வையில் தேர்தல் நடந்தது. நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

முன்னதாக ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில் வரிசையில் வந்து நின்ற அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு தனியே வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தேர்தல் ஓட்டுப்பதிவு பணியை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேரடியாக மேற்பார்வையிட்டார்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 லட்சத்து 98 ஆயிரத்து 762 வாக்காளர்களில், நேற்று மாலை 6:00 மணி வரை 14 லட்சத்து 22 ஆயிரத்து 816 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். கடந்த பல தேர்தல்களைக் காட்டிலும், இந்த முறை விழுப்புரம் மாவட்டத்தில், மிக அதிக சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

இளைஞர்களின் அரசியல் ஆர்வம் மற்றும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு காரணமாக, தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுமென பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement