பாஜவில் இணைந்த ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பிக்கள்: கெஜ்ரிவால் அதிர்ச்சி

38

புதுடில்லி: ஆம் ஆத்மி எம்பிக்கள் ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் பாஜவில் இணைந்தனர்.


இது தொடர்பாக சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் நிருபர்களை சந்தித்த ராகவ் சத்தா கூறியதாவது: ராஜ்யசபாவில் 3ல் 2 பங்கு உறுப்பினராக இருக்கும் நாங்கள், அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய விதிமுறைகளின்படி பாஜவில் இணைத்து உள்ளோம்.


ஆம் ஆத்மி கட்சி எனது குரலை ஒடுக்க பார்த்தது.ஊழலை ஒழிக்க வந்த கட்சி இப்போது ஊழல் கட்சியாகிவிட்டதால் விலகுகிறோம். தவறான கட்சியில் சரியான நபர் என்ற மனநிலை எனக்கு கடந்த சில நாட்களாக தோன்றியது.


ராஜ்யசபாவில் ஆம் ஆத்மிக்கு 10 எம்பிக்கள் உள்ளனர். அதில் 3 ல் 2 பங்கு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள் மற்றும் கடிதங்களை ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பித்து விட்டோம். 3 பேர் உங்கள் முன் உள்ளனர். இவர்களை தவிர்த்து, ஹர்பஜன் சிங், ரஜிந்தர் குப்தா, விக்ரம் ஷானே மற்றும் ஸ்வாதி மலிவாலும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

பிரதமருக்கு புகழாரம்



பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும், உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை கொண்டு வருவதிலும் முந்தைய அரசுகள் எடுக்க தயங்கிய நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ளது. மோடியின் தலைமையை மக்கள் மூன்று முறை அங்கீகரித்துள்ளனர். அவரது தலைமையில் நாங்கள் பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். உறுதிப்பாடு கொண்டவாக உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் இணைந்து நாட்டிற்காக அயராது பாடுபடுவோம்.

எம்பி பதவியில் இருக்கும் எனது குரலை சொந்த கட்சியை ஒடுக்கிவிட்டதால், சமானிய மக்களின் பிரச்னைகளை எழுப்ப இயலாது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு ஒன்று உறுதியளிக்க விரும்புகிறேன். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் அதே அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் நான் தொடர்ந்து எழுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.



சந்தீப் பதக் கூறியதாவது: ஆம் ஆத்மியில் கடந்த 10 ஆண்டுகளாக இரு்கிறேன். இன்று முதல் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தாண்டி கடுமையாக உழைத்து உள்ளேன். இதற்கு கடவுளே சாட்சி. இன்று முதல் எனது பாதை வேறு இவ்வாறு அவர் கூறினார்.

யார் இவர்கள்



ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு அக்கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மியின் ராஜ்யசபா துணைத்தலைவராக இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில், அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார். தற்போது இவரும், ராகவ் சத்தா உடன் பாஜவில் இணைய உள்ளனர். இருவரும் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சந்தீப்குமார் பதக்கும் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வானார்.


ஆம் ஆத்மி குற்றச்சாட்டு



இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது: ஆப்பரேஷன் தாமரை நடத்திய பாஜ எம்பிக்களை இழுத்துள்ளது. இதற்காக அரசு அமைப்புகள் மூலம் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. மேலும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, பஞ்சாபை ஆட்சி செய்யும் பக்வந்த் மன் அரசையும் கவிழ்க்க முயற்சி நடக்கிறது. இந்த துரோகிகளை பஞ்சாப் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பஞ்சாப் மக்களுக்கு பாஜ மீண்டும் அநீதி இழைத்துள்ளது எனத் தெரிவித்து உள்ளார்.

Advertisement