வீடு கட்டுவதை ஒத்திப்போடுவதால் செலவு அதிகரிக்கும்!

எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் அல்லது நல்ல விலைக்கு விற்று நிதி தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் மக்கள் நிலம் வாங்குகின்றனர். ஒரு கட்டத்தில் இவ்வாறு வாங்கிய நிலத்தில் வீடு கட்டலாம் என்றும் மக்கள் திட்டமிடுகின்றனர்.

இப்படி வீடு கட்டலாம் என்று திட்டமிட்டு அதற்கான கட்டுமான பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரரை அணுகும் போது, அவர் ஒரு பட்ஜெட் கொடுப்பார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகையை உடனடியாக திரட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும்.

இதில் பெரும்பாலான மக்கள் தைரியமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வதில்லை. பொறியாளர் தெரிவிக்கும் பட்ஜெட்டில், குறிப்பிடப்படும் தொகை அதிகமாக உள்ளது என்று நினைப்பவர்கள் கூடுதல் நிதியை திரட்ட நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

இதற்காக புதிய வீட்டுக் கான கட்டுமான பணிகளை சில மாதங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கின்றனர். குறிப்பாக, புதிதாக வீடு கட்டும் போது, சிமென்ட், மணல், கம்பி போன்ற கட்டுமான பொருட்களின் விலை நிலவரத்தை விசாரிக்க வேண்டும்.

இதில், அந்த சமயத்தில் இப்பொருட்களின் விலை திடீரென உயர்ந்து இருந்தால் அதற்கான காரணங்களை விசாரிக்கலாம். தற்காலிகமான விலை உயர்வு என்றால் சில வாரங்களில் அந்த விலை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதில் ஒரு அடிப்படை விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் உயர்வு சற்று குறைந்தாலும், ஒருபோதும் பழை விலைக்கு வராது. எனவே, விலை உயர்வு என்பதை ஒரு காரணமாக வைத்து வீடு கட்டும் பணிகளை ஒத்திவைக்காதீர்.

மேலோட்டமாக பார்த்தால் இதனால், செலவு குறைய வாய்ப்பு ஏற்படுமோ என்ற எண்ணம் எழலாம். உண்மையில் கட்டுமான துறையில் பணிகளை ஒத்திவைத்தால் செலவு மேலும் அதிகரிக்கும் என்பதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறை, காலநிலை மாறுபாடு, உங்கள் மனை அமைந்துள்ள பகுதியில் வேறு பணிகள் நடப்பது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டும் தற்காலிகமாக ஒத்திவைப்பு முடிவை எடுக்கலாம். ஆனால், பொருட்களின் விலை உயர்வு போன்ற விஷயங்களுக்காக திட்ட பணியை ஒத்திவைப்பது பட்ஜெட்டை மேலும் அதிகரிக்க செய்யும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

கட்டுமான பொருட்களின் விலையில் ஏற்படும் உயர்வு சற்று குறைந்தாலும், ஒருபோதும் பழைய நிலைக்கு வராது, எனவே, விலை உயர்வு என்பதை ஒரு காரணமாக வைத்து வீடு கட்டும் பணிகளை ஒத்திவைக்காதீர்.

Advertisement