திருவள்ளூரில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பு; விழிப்புணர்வால் ஆர்வம் காட்டிய மக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், அதிகபட்ச ஓட்டு பதிவானதுடன், எந்தவொரு பிரச்னைகளும் இன்றி தேர்தல் நடந்திருப்பது, பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

100 சதவீதம் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரதாப் தலைமையில், பல்வேறு துறை அலுவலர்கள், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும், கலெக்டர் பிரதாப், அலுவலர்களுடன் நேரடையாக சென்று பொதுமக்கள், மீனவர்கள், வியாபாரிகள் என, பல்வேறு தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன் பயனாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு 83.77 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

இது, 2021 சட்டசபை தேர்தலைவிட, 11 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக, கும்மிடிப்பூண்டியில், 90.97 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்தது.

முன்னெச்சரிக்கை தேர்தல் நாளிலும், எந்தவொரு பிரச்னை மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஒவ்வொரு தொகுதி யிலும், 20 சதவீதம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டிருந்தன.

அதேபோல், 20 சதவீதம் கூடுதல் அலுவலர்களும் தயார் நிலையில் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.

இயந்திரங்கள் பழுதான இடங்களில், அதற்குரிய வல்லுநர் குழு துரிதமாக செயல்பட்டு சரி செய்தது.

மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு விழிப்பணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஓட்டுப்பதிவு அதிகரித்ததுடன், தேர்தலும் சுமுகமாக நடைபெற்றது.

இது, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Advertisement