பெண் தர மறுத்த விவசாயியை வெட்டிக்கொன்ற 2 பேர் சிக்கினர்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலையை சேர்ந்தவர் ஜோசப் ராஜ், 50; விவசாயி. இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இளைய மகள் சுரண்டையில் உள்ள கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.

நேற்று முன்தினம் மாலை, தன் தோட்டத்திற்கு சென்ற ஜோசப் ராஜை, ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி, கொலை செய்து தப்பியது. ஊத்துமலை போலீசார் விசாரித்தனர்.

அதில், ஜோசப் ராஜின் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட மாடுகளில், பால் கறக்கும் பணியை, அதே பகுதியை சேர்ந்த மதன், 24, என்பவர் செய்தார். அவர், ஜோசப் ராஜின் இளைய மகளை திருமணம் செய்ய விரும்பியதாக தெரிகிறது. அதற்கு, ஜோசப் ராஜ் மறுத்தார். மனமுடைந்த மதன், சில மாதங்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்டார்.

இதில், ஆத்திரமடைந்த அவரது அண்ணன் மகேஷ், 25, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஜோசப் ராஜை வெட்டி, கொலை செய்தது தெரிந்தது. மகேஷ், மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர்.

Advertisement