நரபலி கொடுக்க மகள் கடத்தல் போலி சாமியார் மீது தந்தை புகார்

ஆலங்காயம்: மகளை கடத்தி சென்று, நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக, போலி சாமியார் மீது தந்தை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், உமையப்ப நாயக்கனுாரை சேர்ந்தவர் ரமேஷ், 45; விவசாயி. இவரது புத்தி சுவாதீனமில்லாத, 19 வயது மகளை குணப்படுத்த, கோமலேரி கொட்டாய் பகுதி கோவிலில், சாமியார் சுப்பிரமணி, 45, என்பவரிடம், 2023ல் அழைத்து சென்றார்.

அவர், 'உங்கள் மகளுக்கு பில்லி, சூனியம், ஏவல் வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற, 15 நாட்களுக்கு, கோவிலில் தங்க வேண்டும். 30,000 ரூபாய் செலவாகும்' என ரமேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, மகளை அங்கேயே விட்டு, பணத்தையும் கொடுத்து சென்றார். ஆனாலும் சரியாகாததால், மகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். இதில், குணமாகி, ஆம்பூரில் தனியார் நர்சிங் கல்லுாரியில் மகளை சேர்த்தார். இந்நிலையில், கல்லுாரிக்கு சென்ற மகள் திடீரென மாயமானார்.

மாணவியின் பெற்றோரை ஏப்., 24ல், தொடர்பு கொண்ட சுப்பிரமணி, 'உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொண்டேன்' எனக்கூறி, இணைப்பை துண்டித்தார்.

அதிர்ச்சியடைந்த ரமேஷ், சுப்பிரமணி வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் கேட்டபோது, 'என் கனவில் சாமி வந்து, உன் மகளை என் கணவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு சொன்னது.

அப்படி செய்தால் தான், நாங்கள் அனைவரும் உயிருடன் இருக்க முடியும். இல்லையென்றால் எங்களை சாமி காவு வாங்கி விடும். நான் தான், உன் மகளை, என் கணவருக்கு திருமணம் செய்து வைத்து, திருப்பதிக்கு அனுப்பியுள்ளேன்' என்றார்.

இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியான ரமேஷ், ஆலங்காயம் போலீசில் புகார் அளித்தார். அதில், தன் மகளை நரபலி கொடுக்க, போலி சாமியார் சுப்பிரமணி, அவரது மனைவி கடத்தி வைத்துள்ளனர். மகளை மீட்டு தர வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

Advertisement