2006 திரும்புகிறதா?
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபைத்
தேர்தலில், வரலாறு காணாத வகையில், ஓட்டு பதிவாகி உள்ளது. 18 - 35
வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள், அதிக அளவில் ஓட்டு போட்டுள்ளனர்.
எப்போதெல்லாம் தமிழகத்தில் அதிகளவில் ஓட்டுகள் பதிவாகின்றனவோ,
அப்போதெல்லாம், ஆட்சியில் இருக்கும் கட்சி தோல்வி அடைவது வழக்கம். இதுவரை,
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, மூன்றாவது கட்சி எதுவும் பெரிய
அளவில் ஓட்டு பெற்றதில்லை.
கடந்த, 2005ல் நடிகர் விஜயகாந்த்
தே.மு.தி.க.,வைத் துவக்கி, ஒன்பது மாதங் களில், 2006 சட்டசபை தேர்தலில்
தமிழகம் முழுதும், 234 தொகுதிகளில் போட்டி யிட்டு, 8.38 சதவீத ஓட்டுகளைப்
பெற்றார்.
விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வென்றார்; மற்ற
தொகுதிகளில் இவரது கட்சியினர் கணிசமான ஓட்டுகளைப் பெற்று, மற்ற இரு திராவிட
கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. தி.மு.க.,வால், 96
தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ், 34 தொகுதிகள் வெற்றி
பெற்று, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்ததால், ஐந்து ஆண்டுகள் மைனாரிட்டி
ஆட்சியை நடத்தியது தி.மு.க.,
பின், 2011 தேர்தலில்,
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி
பெற்றது. எதிர்க்கட்சி தலைவராக, விஜயகாந்த் அமர்ந்தார். ஆனால், அதன் பின்
விஜய காந்த் எடுத்த தவறான அரசியல் முடிவுகளும், அவரின் உடல்நிலையும், அவரை
அரசியலிலிருந்தே ஓரங்கட்ட வைத்து விட்டன.
அடுத்து வந்த கமல்ஹாசன்,
பெரிதாக ஒன்றும் சாதிக்காததால், மக்களால் அவரை சிறந்த தலைவராக அங்கீகரிக்க
முடியவில்லை. மேலும் அவர், யாருடைய ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தனிக்
கட்சி ஆரம்பித்தாரோ, அந்த கட்சியின் அடி வருடியாக மாறி, தனக்கு மட்டும் ஒரு
ராஜ்ய சபா, 'சீட்' வாங்கிக் கொண்டு, தொண்டர்களை நட்டாற்றில் விட்டதால்,
மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது.
இரண்டு திராவிட
கட்சிகளின் ஊழல் ஆட்சிகளை பார்த்து மனம் வெறுத்து இருந்த மக்களும், முதல்
முறையாக ஓட்டு போடுபவர்களும், புதிதாக களம் கண்டுள்ள விஜய் கட்சிக்கு
பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
எனவே, 2006ல் எப்படி தி.மு.க.,
வெறும், 96 இடங்களில் வெற்றி பெற்று, காங்.,கின் 34 எம்.எல்.ஏ.,க்களின்
ஆதரவுடன் ஆட்சி அமைத்ததோ, அதே நிலை இப்போது ஏற்படுமோ என்று தோன்றுகிறது.
இப்போது வெளியிலிருந்து ஆதரவு என்பது, காங்., அல்லாமல் வேறு கட்சியாக
இருக்கலாம். அது எது என்பதும், ஆட்சி அமைக்கப் போவது எந்த கட்சி என்றும்,
ஆச்சரியம் கலந்த எதிர்பார்ப்பு, தமிழகம் முழுதும் தொற்றிக் கொண்டுள்ளதை,
கண்ணெதிரே காண முடிகிறது!
மசாலா பொரியும் மனங்களை வெல்லும் மந்திரமும்!
லால்குடி நாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜார்கிராம் என்ற இடத்தில் மசாலா பொரி சாப்பிட்டதும், அது குறித்து அவர் கிண்டலாகப் பேசியதும், அரசியல் நாகரிகத்தின் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
'நான் மசாலா பொரி சாப்பிட்ட காரம், திரிணமுல் காங்கிரசுக்கே உறைத்துள்ளது' என்று அவர் கூறியிருப்பது, ஒரு தலைவரின் நகைச்சுவை உணர்வையும், அதே சமயம் சாமானிய மக்களோடு அவர் கொண்டுள்ள நெருக்கத்தையும் பறைசாற்றுகிறது.
ஒரு நாட்டின் பிரதமர், பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி, சாலையோர கடையில் ஒரு சாதாரண உணவை ரசித்து உண்ணும் செயல், அவர் இன்னும் தன் வேர்களை மறக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
மசாலா பொரி என்பது மேற்கு வங்கத்தின் சாதாரண மக்களின் அடையாளம். அந்த அடையாளத்தை அவர் அங்கீகரித்த விதம், அங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
அரசியல் விமர்சனங்களை வெறும் குற்றச்சாட்டுகளாக மட்டுமே பார்க்காமல், இப்படி ஒரு சுவையான நையாண்டியோடு முன்வைப்பது, மோடிக்கே உரித்தான பாணி.
கடந்த காலங்களில், தேர்தல் வன்முறைகளின்போது, வாரம் ஒருவராவது பலியாவர் என்ற நிலையை மாற்றி, இம்முறை வன்முறை குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
மே 4-ம் தேதி வெற்றி கொண்டாட்டத்தின் போது மசாலா பொரியும், இனிப்பும் வழங்கப்படும் என்று அவர் சொன்னது, கட்சி தொண்டர்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்து உள்ளது.
மக்களின் உணர்வோடு கலந்து, அவர்களின் மொழியில் பேசி, எளிய உணவைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தலைவரால் தான் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்!
அரசு கவனத்திற்கு!
ஜெ.ஜெரால்டு மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்கம் தவிர அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், சட்டசபை தேர்தல், மிக அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், இன்னும் ஒரு கட்ட தேர்தல், வரும் 29ல் நடக்கிறது.
தமிழகத்திற்கு, 1,302 கோடி ரூபாய், தேர்தலுக்காக செலவாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையர், தமிழகத் தேர்தல் ஆணையர், கலெக்டர், காவல் துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தின் அனைத்து தரப்பு அலுவலர்கள், ஊழியர்கள், தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மிக அழகாக, வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி உள்ளோம். மகிழ்ச்சியான விஷயம்.
ஒரே ஒரு நெருடல்... ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், பண்டிகைகள், விழாக்காலங்கள், தேர்தல் நேரங்களில், தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவதில், அதிக சிரமத்தைச் சந்திக்கின்றனர் என்பது தான் அந்த நெருடல்.
சொந்த ஊருக்குச் செல்வது இன்றியமையாதது என்பதை, அரசும் முற்றிலும் உணர்ந்திருக்கிறது. ஆனால், அதற்கான போதுமான, திட்டமிட்ட போக்குவரத்து வசதியோ, விடுமுறை வசதியோ கிடைப்பதில்லை. இந்த சிரமங்களை தாண்டி, பஸ், ரயில், விமான டிக்கெட்டுகளை, 'புக்' செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து மற்றும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்குகளாக உயர்த்தப்பட்டு, நம்மை தாளித்து எடுக்கிறது.
இதுபோன்ற வேளைகளில், ஊழியர்கள் முன்கூட்டியே தங்கள் ஊருக்குச் செல்லும் வகையில், கூடுதல் விடுமுறை நாட்கள் அளித்து, பின்வரும் நாட்களில் ஈடு செய்தால், பிரச்னை தீரும் என தோன்றுகிறது. நடைமுறைப்படுத்தப்படுமா?
மேலும்
-
விமான பயண கட்டணம் 'விர்ர்ர்': டிக்கெட் கிடைக்காததால் அதிர்ச்சி
-
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர முடியாது; தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
-
போர் நிறுத்தம் குறித்து புடினுடன் ஆலோசிக்க திட்டம்; ரஷ்யா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர்
-
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; அசராமல் சாலட் சாப்பிட்டவர் வீடியோ வைரல்
-
மனைவிக்கு விஜய் ரூ.12.6 கோடி கடன்: விசாரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
-
மானாமதுரை சித்திரை விழா திருக்கல்யாணம்