மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவியோர் மே 4க்கு பின் வெளியேற்றப்படுவர்: பிரதமர் மோடி எச்சரிக்கை

6

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 29ம் தேதிக்குள், ஊடுருவல்காரர்கள் அனை வரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், மே 4ம் தேதிக்கு பின் அனைவரும் வெளியேற்றப்படு வர்,” என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி செய்கிறது. இங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.


ஓட்டுப்பதிவு



இதன்படி, தமிழகத்துடன் சேர்த்து, 152 தொகுதிகளுக்கு, கடந்த 23ல் முதல் கட்டத் தேர்தல் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கும் வரும் 29ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இதையடுத்து, இறுதி கட்ட தேர்தல் பிர சாரம் சூடுபிடித்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் பகுதியில் பா.ஜ., சார்பில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., ஆட்சியின் கீழ் சாதாரண அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை அனைவரும் தங்களையே அரசு நிர்வாகம் போல் கருதி செயல் படுகின்றனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கொடுங்கோல் ஆட்சி, பெண்களை துன்புறுத்தும் ரவுடிகளுக்கே துணை நிற்கிறது. 'இனி மேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்' என, உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் சமூக விரோதிகள் அனைவரும், மே 4ம் தேதிக்குப் பின், மேற்கு வங்கத்தில் அமைய உள்ள புதிய பா.ஜ., அரசின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.

சந்தேஷ்காலியைச் சேர்ந்த ரேகா பாத்ரா மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் தாய் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ., வாய்ப்பளித்துள்ளதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் நிலைப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது.


சாதனை



வரும் சட்டசபைத் தேர்தலில், மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்தால், திரிணமுல் காங்.,கின் காட்டுத் தர்பாரில் இருந்து நான் உங்களுக்கு சுதந்திரம் அளிப்பேன்.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 29ம் தேதிக்குள் ஊடுருவல்காரர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், மே 4ம் தேதிக்குபின் அனைவரும் வெளியேற்றப்படுவர்.

தேர்தலின் முதல் கட்டத்தில் 93 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி சாதனை படைத்ததன் மூலம் திரிணமுல் காங்.,யின் ஆணவம் தகர்க்கப்பட்டது; இரண்டாவது கட்டத் தேர்தல் இம்மாநிலத்தில் பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement