நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்

ஜெய்ப்பூர்: டில்லியில் இருந்து புவனேஸ்வர் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானத்தில் நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப் பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து ஒடிஷாவின் புவனேஸ்வர் நோக்கி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை புறப்பட்டது. 'ஐ.எக்ஸ்., 1057' என்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.

இது குறித்து விமான நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்குள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, அருகில் உள்ள ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அங்குள்ள அதிகாரிகளிடம் நடத்திய பேச்சைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பயணியர் விமானத்திலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

எரிபொருள் நிரப்பப்பட்ட தை அடுத்து, விமானம் மீண்டும் புவனேஸ்வர் புறப்பட்டது.

எரிபொருள் பற்றாக்குறையை தவிர வேறு எந்த தொழில்நுட்ப கோளாறும் விமானத்தில் ஏற்படவில்லை என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement