தெருநாய்களின் ரத்தம் ரூ.25,000க்கு விற்பனை

2

ஹைதராபாத்: தெலுங்கானாவில், தெருநாய்களை பிடித்து அதன் ரத்தத்தை சட்டவிரோதமாக எடுக்கும் கால்நடை மருத்துவர், அதை செல்லபிராணிகளுக்கு செலுத்துவதற்காக அதன் உரிமையாளர்களிடம் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஷேக்பேட் பகுதியில் தனியார் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் தெருநாய்களை சட்டவிரோதமாக பிடித்து அதன் ரத்தத்தை எடுத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் மேனகாவும் மாநில விலங்குகள் நல அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

ஹைதராபாத் நகர் முழுதும் சுற்றித்திரியும் தெருநாய்களை அந்த டாக்டர் பிடித்து அதற்கு சரியான உணவோ, நீரோ தராமல் கூண்டுகளில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் அவற்றின் ரத்தத்தை சட்டவிரோதமாக சேகரிக்கும் அவர் ரத்தம் தேவைப்படும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களிடம் விற்பனை செய்கிறார்.

ஒரு முறை செல்லப்பிராணிகளுக்கு ரத்தம் செலுத்த 18,000 ரூபாய் முதல் 25,000 வரை அதன் உரிமையாளர்களிடம் வசூலிக்கிறார்.

இது தவிர உரிமம் பெறாமல் ரத்த வங்கியும் நடத்துகிறார். தெருநாய்களிடம் அடிக்கடி ரத்தம் எடுப்பதால் அவை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் விலங்குகள் நலத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

Advertisement