கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி

12

நியூயார்க்: வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.


பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மன்னர் 3ம் சார்லஸூம், ராணி கேமிலாவும், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மன்னர் 3ம் சார்லஸை நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான சோஹ்ரான் மம்தானி சந்தித்து பேசினார்.


முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மம்தானி, "பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸைச் சந்திக்கும்போது வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு அவரிடம் வலியுறுத்துவேன்," என்று கூறினார். ஆனால், மன்னர் 3ம் சார்லஸூடனான சந்திப்பின் போது வைரத்தைப் பற்றிய பேச்சு நடத்தப்பட்டதா? என்பது குறித்து தெளிவான தகவல் ஏதுமில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்துவிட்டது.

கோஹினூர் வைரம்



105.6 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம், உலகின் மிக விலையுயர்ந்த வைரங்களில் ஒன்றாகும். 1849ம் ஆண்டு லாகூர் உடன்படிக்கையின் மூலம், மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த வைரத்தைக் கைப்பற்றியது. தற்போது இந்த வைரம் ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


இந்த வைரம் காலனித்துவ சுரண்டலின் சின்னம் என்றும், சீக்கிய மன்னரிடமிருந்து கட்டாயப்படுத்திப் பறிக்கப்பட்டது என்றும் கூறி, வைரத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு பிரிட்டனிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement