சங்கராபரணி ஆற்றின் ஓரம் கொட்டப்படும் இறந்த கோழிகளால் தொற்று நோய் அபாயம்

புதுச்சேரி: பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணைகளில் இறந்த கோழிகள் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருக்கனுார் சுற்றுவட்டாப் பகுதியில் பிராய்லர் கோழிகள் வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் தொற்று நோய் ஏற்பட்டு இறந்தால், அவற்றை, மற்ற உயிரினங்களுக்கு நோய் பரவாத வகையில், பாதுகாப்பான முறையில் பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும்.

ஆனால், பண்ணைகளில் தொற்று நோய் ஏற்பட்ட இறந்த பிராய்லர் கோழிகள் எந்தவித பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்காமல், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சுடுகாட்டு பகுதிகளில் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த இறைச்சிகளை காகம் போன்ற பறவைகள் சாப்பிடுவதால், அதன் மூலம் மற்ற உயிரினங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் இறந்ததால் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகிறதா என சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement