சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்/ 03/05/26 ஞாயிறு 1 இதழ்
-––––––––
நாணயம் விகடன், ஏப்., 19, 2026, பக்: 56
தரம், நம்பிக்கை,
தனித்துவம்
என் தாரக மந்திரம்!
––––––––––
திருப்பூரில் மூன்று கிளைகளுடன் செயல்படும், பி.எஸ்.ஆர்., ஹோட்டல் உரிமையாளர் ராஜா பகதுார்:
என் சொந்த ஊர், மதுரை மாவட்டம், கருங்காலக்குடி. 1998ல் திருப்பூர் வந்த போது என்னிடம் இருந்தது உழைப்பும், என் ஊர் உணவின் மீதான நம்பிக்கையும் மட்டுமே!
முதன்முதலில், திருப்பூர் காங்கேயம் சாலையில் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பித்தேன். மதுரையில் மிகவும் பிரபலமாக இருந்த ஆயில் பரோட்டாவும், குருமாவும் அப்போது திருப்பூரில் அறிமுகமில்லை. அந்த ஸ்டைல் பரோட்டாவை, முதன் முதலில் திருப்பூருக்கு அறிமுகப்படுத்தியது நாங்கள் தான்.
கடை ஆரம்பித்த முதல் நாளே, 50 கிலோ மைதா மாவில் செய்த பரோட்டாக்கள் விற்று தீர்ந்தன. என் கைவண்ணத்தில் தயாரான தனித்துவமான மதுரை ஸ்டைல் குருமாவுக்காகவே, திருப்பூர் மக்கள் என் கடைக்கு வரத் துவங்கினர். அந்த ருசி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இப்போது வரை எந்த மசாலாவையும் வெளியில் வாங்காமல், நாங்களே அரைத்து தயார் செய்கிறோம்.
குடும்ப பெரியவர்களின் ஆசியுடன், என் உணவகத்தின் முதல் கிளையை 2002ல் ஆரம்பித்தேன். அதன்பின், எங்கள் வளர்ச்சி வேகம் எடுத்தது. அடுத்தும் இரண்டு கிளைகள் துவக்கினோம். தற்போது இந்த இரண்டு கிளைகளையும், என் இரு மகன்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
கடை துவங்கி, 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் திருப்பூர் மக்கள் மட்டுமின்றி, அவிநாசி, கோவை, பல்லடம் என பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் திரளாக வந்து, எங்கள் உணவகத்தின் ஆயில் பரோட்டாக்களை சாப்பிட்டு செல்கின்றனர்.
எங்கள் மூன்று கடைகளிலும் ஒரு நாளைக்கு, 200 கிலோ மாவில் செய்யும் பரோட்டாக்கள் மற்றும் 60 கிலோ சிக்கன் விற்பனை ஆகும் அளவுக்கு வளர்த்திருக்கிறோம்.
எத்தனை கிளைகள் துவக்கினாலும், அனைத்து இடங்களிலும் ஒரே சுவை இருப்பதை, நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன். வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே என் அடிப்படை அறம். மூன்று கடைகளிலும் சேர்த்து மாதம், 10 லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடக்கிறது என்பதே, எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு உதாரணம்.
இளைஞர்களுக்கு நான் கூறுவது என்னவெனில், எந்த ஒரு தொழிலுக்கும், லாபம் என்பது முக்கியம் தான். ஆனால் அதையும் தாண்டி, மக்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். தரம், நம்பிக்கை, தனித்துவம் ஆகிய மூன்றையும் சரியாக செய்தால், மக்கள் நிச்சயம் ஆதரவு தருவர்; நாமும் தொடர்ந்து வெற்றி பெறலாம்.
***