சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்/ 03/05/26 ஞாயிறு 2வது இதழ்
–––––––––––––
பசுமை விகடன், பிப்., 25. 2026. பக்: 64
அறிவியல் சார்ந்த
இயற்கை
விவசாயம் தான்
எதிர்காலம்!
––––––––––
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் முன்னாள் துணைவேந்தரான, புதுக்கோட்டை மாவட்டம், நிலையூர் கிராமத்தை சேர்ந்த, 78 வயதாகும் முனைவர் ராமசாமி:
நான், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கடும் பொருளாதார நெருக்கடியால், பி.யு.சி., முடித்து விட்டு ஓராண்டு வரை எந்த கல்லுாரியிலும் சேரவில்லை. அப்போது, நெல் வண்டி ஓட்டி சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, அடுத்த ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் சேர்ந்தேன்.
கோவை வேளாண் கல்லுாரியில், பயிற்சியாளர் பணியில் இணைந்தேன். பின், பெல்ஜியம் நாட்டில் உயர்கல்வி பயின்று, 1980ல் இந்தியா வந்து, அதே பல்கலையில் உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.
கரூர் அருகே பொத்தனுார் வேலுாரில் வெற்றிலை கொடிக்கு, ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. நான், ஒவ்வொரு வாரமும் அங்கு சென்று ஆய்வு செய்வேன். 1981ல் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையால், ஆராய்ச்சி நிதியாக 87 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதுதான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 1984 – 85ல் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவிலான, ‘பயோ காஸ் பிளான்ட்’கள் அமைத்ததற்காக, எனக்கு தேசிய விருது கிடைத்தது. வேளாண் பல்கலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். தொடர்ந்து, தமிழக அரசின் திட்டக்குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, கோவை கற்பகம் பல்கலையில் துணைவேந்தராக இருந்தேன். 2012 முதல் 2018 வரை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தராக பணியாற்றினேன்.
விருதுகளுக்காக நான் பணியாற்றவில்லை; என் பணிகளை சரியாக செய்கிறேன். விருதுகள் தானாக கிடைக்கின்றன. இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, அதிக உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
நாளடைவில், உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய துவங்கியதால், இயற்கை விவசாய முன்னெடுப்புகள் படிப்படியாக அதிகரித்தன. அறிவியல் சார்ந்த இயற்கை வேளாண்மை தான் காலத்தின் கட்டாயம். வேளாண்மையுடன் இணைந்து ஆடு, கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு வாயிலாக அதிக வருமானம் ஈட்ட முடியும்.
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பந்தய காளைகளை வளர்ப்பது கவுரவம் மட்டுமின்றி, லட்சக்கணக்கில் வருமானம் தரும் தொழிலாகவும் மாறியுள்ளது. இளைஞர்களுக்கு வேளாண்மை சார்ந்த வேலை வாய்ப்புகளை, அரசு அதிகம் உருவாக்க வேண்டும். சாலை ஓரங்களில் பனை விதைகள் நடுவது போன்ற சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
தொடர்புக்கு: 94440 65656.
***