குறைபாடுகளை தி.மு.க., அரசு சரிசெய்ய தவறி விட்டது; மா.கம்யூ., பாலகிருஷ்ணனுக்கு திடீர் ஞானோதயம்

8

விழுப்புரம்: 'இடது சாரிகளுக்கான அங்கீகாரத்தை தி.மு.க., வழங்க மறுத்து விட்டது' என மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

விழுப்புரத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்த சட்டசபை தேர்தல் களம் முற்றிலும் வித்யாசமாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு பல விதமான கருத்து கணிப்புகள் வந்தாலும், அதில் பா.ஜ.,வுக்கு இடமில்லை என்பதை அனைத்தும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா படை எடுத்தாலும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி குறிப்பிட்ட சதவீதத்தில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு சொல்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசு கடை பிடிக்கும் நடவடிக்கைகளை பார்த்தே எங்கள் செயல்பாடு இருக்கும். தேர்தலின்போது, மா.கம்யூ., - இந்திய கம்யூ., கேட்ட குறைந்தபட்சம் 6 தொகுதிகளைக் கூட தி.மு.க., தரவில்லை. இடது சாரிகளுக்கான உரிய அங்கீகாரத்தை தர தி.மு.க., மறுத்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும், பா.ஜ., உள்ளே வரக்கூடாது என்பதற்காக, கூட்டணிக்குள் எவ்வித இடை யூறும் தராமல் இடது சாரிகள் பணியாற்றினர். இருந்தாலும், மீண்டும் அமையும் தி.மு.க., ஆட்சி மக்களுக்கானதாக இல்லாமல் தொடர்ந்தால் நாங்கள் போராடுவோம்.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் போராட்டம், அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அனைத்தும் ஒப்பந்த முறை பணி நியமனம் போன்ற பல குறைபாடுகளை கடந்த கால தி.மு.க., அரசும் சரிசெய்யத் தவறி விட்டது.

ஸ்ரீபெரும்பதுார் தொழிற்சங்க உரிமைக்கு போராடிய முத்துக்குமரன் போன்றோரை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்தனர்.

தொழிலாளர்கள் ஒடுக்குமுறை தான் தொடர்கிறது. மீண்டும் அது தொடர்ந்தால் பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற புரிந்துணர்வு ஏற்பட்டு இளைஞர்களிடம் எழுச்சி வந்துள்ளதை வரவேற்கிறோம். ஈரான் மீதான போர் சம்பவத்தால், நமக்கு சிலிண்டர் விலை உயர்வு போன்ற பல நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வாதிகார செயல்பாடுகளை இந்திய அரசு கண்டிக்கவும் இல்லை. இத்தகைய போக்கு சரியானதல்ல.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Advertisement