கரூர் சம்பவத்தில் விஜய் குற்றமற்றவர்

3

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என, தமிழகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், டில்லி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், தமிழகம் தொடர்பான ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகிறது. அது, கரூர் சம்பவம் தொடர்பாக தான்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கடந்தாண்டு செப்டம்பரில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில், 41 பேர் இறந்தனர். 'இதற்கு விஜய் தான் காரணம்' என, தி.மு.க., தரப்பு கூறியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, த.வெ.க., உச்ச நீதிமன்றம் சென்றது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைக்கவும் ஆணை பிறப்பித்தது.

இந்த குழுவில், தமிழக கேடரைச் சார்ந்த, ஆனால் தமிழரல்லாத இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் நியமித்தது உச்ச நீதிமன்றம். சம்பவ இடத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர்.

மூன்று முறை சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லியில் ஆஜரானார் விஜய். அதே போல, த.வெ.க.,வின் மற்ற தலைவர்களையும் சி.பி.ஐ., விசாரித்தது.

தி.மு.க.,வின் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன.

இது குறித்து, டில்லி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பேசப்படுவது இது தான். சி.பி.ஐ., முதல்நிலை முடிவு எடுத்து விட்டதாம். இதன்படி, 'விஜய் குற்றமற்றவர்; இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார்' என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.

'கரூருக்கு விஜய் சென்ற போது, அங்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தவிர, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில், அளவுக்கு அதிகமானோர் கூடிய போது, காவல் துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

'அங்கு விஜயை வர விடாமல் போலீஸ் தடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. எனவே, இந்த இறப்புகளுக்கு முக்கிய காரணமே, போதிய ஏற்பாடுகள் செய்யாதது தான்' என, முதல் கட்ட முடிவிற்கு சி.பி.ஐ., வந்துள்ளதாம்.

சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள காவல் துறை அதிகாரிகள், தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் திரும்பிய பின், சி.பி.ஐ., தன் முதல் கட்ட அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என, சொல்லப்படுகிறது. 'விஜய் காரணமல்ல என்றால், விபத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து, விரிவான அறிக்கையில் சி.பி.ஐ., தெரிவிக்கும்' என்றும் கூறப்படுகிறது.

Advertisement