மின் விளக்குகள் ஒளிராத அண்ணா நுாற்றாண்டு பூங்கா மாநகராட்சி தி.மு.க., வசம் இருந்தும் பராமரிப்பில்லை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் உள்ள அண்ணா நுாற்றாண்டு பூங்காவில் மின் விளக்குகள் எரியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தி.மு.க., வசம் இருந்தும் பராமரிக்காததால், குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் தினமும் சிரமப்படுகின்றனர்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 2009ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காஞ்சிபுரம் நகருக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்த நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றாக, பிள்ளையார்பாளையம் பகுதியில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பெரிய அளவில் நவீன வசதிகளுடன், விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்ட இப்பூங்கா ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பராமரிப்புடன் இருந்தது.

அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, இப்பூங்கா மிக மோசமான நிலையில் காணப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., வசம் வந்த போதும், இப்பூங்கா மோசமான நிலையிலேயே தொடர்கிறது.

காஞ்சிபுரம் நகர மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாக இருக்கும் இந்த பூங்கா படுமோசமாக உள்ளது. மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.

அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கு வருகின்றனர். முதியோர் மற்றும் நடுத்தர வயதினர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு பலர் பயன்படுத்தும் பூங்காவின் நடைபாதை, கழிப்பறை, மின் பெட்டிகள், விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், அழகு நீரூற்றுகள் என அனைத்தும் நாசமாகி உள்ளன.

மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தி.மு.க., மேயர் மகாலட்சுமி, கமிஷனர் என, இப்பூங்காவை கண்டுகொள்வதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement