எஸ்.பி.ஜி.,க்கு நன்றி சொன்ன பிரதமர்!

16

புதுடில்லி: மேற்கு வங்க தேர்தலின் இரண்டாவது மற்றும் கடைசி பிரசாரத்தை முடித்து, சிக்கிம் சென்ற பிரதமர் மோடி, இரு நாட்கள் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், தன் தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அதன்பின், ஏப்., 29 இரவு டில்லி திரும்பினார். நான்கு நாட்கள் டில்லிக்கு வெளியே தங்கினார் பிரதமர்.

பிரதமருக்கு எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கிறது. டில்லிக்கு வெளியே பிரதமர் தங்கும் போது, பாதுகாப்பு அளிப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. அதுவும், தேர்தல் நேரத்தில், 'ரோடு ஷோ' நடத்தும்போதெல்லாம், எஸ்.பி.ஜி.,யின் பாடு, படு திண்டாட்டம். இந்த நான்கு நாட்களிலும், எஸ்.பி.ஜி.,யின் வேலை மிகவும் கடினமாக இருந்ததாம்.

டில்லி திரும்பிய உடன், பிரதமர் மோடி செய்த ஒரு விஷயம், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது. எஸ்.பி.ஜி.,யின் தலைமை அலுவலகம், டில்லியில் உள்ள துவாரகாவில் அமைந்துள்ளது. இங்கு, எஸ்.பி.ஜி.,யில் பணிபுரியும், டிரைவர் உள்ளிட்ட, 4,500 பேருக்கும் பிரதமர் விருந்து அளித்தாராம்.

அப்போது, 'என்னை பாதுகாப்பதில், நீங்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறீர்கள் என்பது தெரியும். எனக்கு அரணாக இருந்து, நீங்கள் பாதுகாத்ததற்கு நன்றி. ஆண்டவனுக்கும் நன்றி' என, பிரதமர் பேசினாராம்.

இந்த விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. இதுவரை, எந்த ஒரு பிரதமரும் எஸ்.பி.ஜி.,க்கு இப்படி விருந்து அளித்து, நன்றி தெரிவித்தது கிடையாதாம்.

இவர்களுடன், பிரதமரின் உதவியாளர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர். பிரதமருக்கு ஐந்து தனிப்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும், இவர்களும் உடன் செல்கின்றனர். பிரதமருக்கு தேவையான உடைகள் உட்பட பல விஷயங்களை இந்த ஐவர் தான் கையாளுகின்றனர்.

Advertisement