மரங்கள் இல்லாத பகுதியில் மரக்கன்று நடவு செய்தால் பயன்

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலையோரம் பசுமை வனப்பகுதியை தவிர்த்து, மரங்கள் இல்லாத பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் குடோன்– நாடுகாணி பகுதிகளுக்கு இடையே, 2 கி.மீ., துாரம் சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதி, கோடையிலும் பசுமையாக காணப்படும். இப்பகுதியில், எப்போதும் உணவு, குடிநீர் கிடைப்பதால் காட்டு யானைகள் அவ்வப்போது முகாமிட்டு செல்வது வழக்கம். அப்போது வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவர். இந்நிலையில், பசுமையான இப்பகுதி சாலையோரத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை சுற்றி ‘பிளாஸ்டிக்’ வலை அமைத்து வருகின்றனர்.

வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை துறையினர் சாலையோரங்களில் மரக்கன்று நடவு செய்வது வரவேற்க கூடியது. ஆனால், அந்த மரக்கன்றுகளை, ஏற்கனவே மரங்கள் நிறைந்த பகுதியில் நடவு செய்வதை தவிர்த்து, மரங்கள் இல்லாத வேறு பகுதிகளில் நடவு செய்ய வேண்டும்,’ என்றனர்.

Advertisement