கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்

109

நமது சிறப்பு நிருபர்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக அடித்த அலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் அக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புத்திசாலித்தனமாக தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கை முடிவில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்க்கு இன்னும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க கவர்னரிடம் 14 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார் விஜய். அதற்குள் அவர் தனக்கு தேவையான ஆதரவு எம்எல்ஏக்களை தயார் செய்ய வேண்டும்.
அதற்கு கட்டாயம் சில கட்சிகளின் ஆதரவு அவருக்கு தேவை. திமுக கூட்டணியில் உள்ள காங்., (5) வி.சி., (2) கம்யூ.,கள், (4) மு.லீக்., (2) தேமுதிக (1) ஆகிய கட்சிகளை பிய்த்து எடுத்து தனக்கு ஆதரவளிக்குமாறு விஜய் கேட்கலாம். ஆனால் இத்தனை கட்சிகளை இழுத்து வருவது பிரம்ம பிரயத்தனம்.

அது மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும்போதே விசிகவும், கம்யூனிஸ்டுகளும் திமுகவை பலமுறை ‛‛பிளாக்மெயில்'' செய்தன. இதனாலேயே வேண்டாத பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தியது போல் அக்கூட்டணி இருந்தது. ‛‛குடும்பத் தலைவர்'' ஸ்டாலினும் இக்கட்சிகளை வெளியே விடாமலும் கேட்டதைக் கொடுக்காமலும் கூட்டணியை இழுத்து சென்றார். ஆக, இக்கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ‛‛வாழ்க்கை'' நடத்துவது விஜய்க்கும் சிரமமாக இருக்கும். ஸ்டாலினையே போட்டுப்பார்த்த இக்கட்சி தலைவர்கள், விஜயை விட்டு வைப்பார்களா.

அதற்குப் பதில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவை மட்டும் ஆதரவு அளிக்குமாறு விஜய் கேட்கலாம். சபாநாயகர் பதவி அல்லது அமைச்சரவையில் பங்கு தருகிறேன் என்று விஜய் உறுதி அளிக்கலாம். சில அமைச்சர் பதவி கிடைப்பதால் இந்த ‛‛டீலுக்கு'' இபிஎஸ் ஒப்புக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் பழனிசாமி கையைவிட்டு அதிமுக சென்று விடும் என்று தேர்தலுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது.

இதற்காகவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் காத்திருக்கின்றனர். அதிமுகவுக்கு உள்ளேயும் சிலர் ‛‛வெயிட்டிங்''. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றால் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பது பழனிசாமிக்கு புத்திசாலித்தனமான வழியாக இருக்கும். தனது கட்சியில் உள்ள சீனியர்களுக்கு விஜய் அரசில் அமைச்சர் பதவியை பழனிசாமி வாங்கிக்கொடுத்தால் அவர்கள் வாயையும் அடைத்து விடலாம். அதிகாரத்தில் பங்கு கிடைப்பதால் அவர்கள் மீண்டும் பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து கொள்வார்கள். கட்சியும் காப்பாற்றப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து விஜய் செயல்படும்போது, தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி அதிக அளவில் கிடைக்கும். தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்கனவே விஜய் அறிவித்த திட்டங்கள்:
200 யூனிட் வரை இலவசம்..

வருடம் 6 சிலிண்டர் இலவசம்..

பெண்களுக்கு தமிழ்நாடு முழுக்க இலவச பயணம்..

திருமணத்தின் போது 8 கிராம் தங்கம், பட்டுபுடவை என மாமன் சீர்..

மூத்த குடிமக்களுக்கு மாதம் 3000

வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000..

5 ஏக்கர் வரை முழு விவசாய கடன் தள்ளுபடி.. அதற்கு மேல் 50% தள்ளுபடி..
பெண்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற கட்டாயம் மத்ததிய அரசின் நிதி உதவி தேவை. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக விஜய் செல்ல வேண்டியது அவசியம். நிதி இல்லாவிட்டால் இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது.

இவற்றை நிறைவேற்றினால் தான் விஜய் அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொடர்ந்து அடுத்த தேர்தல்களில் மக்களை சந்திக்க முடியும்.

விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு விஜய் சொல்லலாம். அப்படி நடந்தால் அதிமுக உடைவதை தவிர்க்க முடியாது. என்ன செய்யப் போகிறார் எடப்பாடி என்பதை பொறுத்து தான் அதிமுகவின் எதிர்காலமே இருக்கிறது.

Advertisement