புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா

கரூர்:'புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது அமைந்துள்ள, த.வெ.க., அரசில் நிறைவேறுமா என, எதிர்பார்ப்பில் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில், சோளம், நெல், வாழைக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி
அதிகளவில் நடக்கிறது. லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், புகழூர், புங்கோடை, சேமங்கி
உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது. வெள்ளை பச்சைக்கொடி, கற்பூர ரக வெற்றிலை சாகுபடி நடக்கிறது. வெற்றிலையில் அடிக்கடி செதில் பூச்சி தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய் தாக்குதலால், சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. வெற்றிலையை தாக்கும் நோய்களுக்கு உடனே தீர்வு காணவும், வெற்றிலை சாகுபடியை மேம்படுத்தவும், தற்போது அமைந்துள்ள த.வெ.க., அரசு, புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இதுகுறித்து, புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:


புகழூர் வட்டார பகுதியில் மட்டும், 1,500 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம். வெற்றிலைக்கு அதிக தண்ணீர் தேவை. மாவட்டத்தில் காவிரி கரையோரம் வெற்றிலை
சாகுபடி அதிகளவில் நடக்கிறது. வெற்றிலையில் பூஞ்சான் தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதிக பனி இருக்கும்போதும் இந்த நோய்கள் ஏற்பட்டு விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாயை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.


இதுபோன்ற நோய் தாக்குதலில் இருந்து மீள்வதற்கு புகழூரில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். ஆராய்ச்சி மையம் இருந்தால், நோய் தாக்கிய பகுதிகளில்
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த உடனே அதற்கு தீர்வு மற்றும் குறைந்த செலவில் அதிக
உற்பத்தியை உருவாக்கும் வகையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement