நீதிபதிக்கு எதிராக அவதுாறு: 'மாஜி' முதல்வருக்கு நோட்டீஸ்
- டில்லி சிறப்பு நிருபர் -
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது அவதுாறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றம், அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து கெஜ்ரிவால், ஆம் ஆத்மி நிர்வாகிகளான மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தெரிவித்த கெஜ்ரிவால் தரப்பினர், இந்த வழக்கை அவர் விசாரிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.
எனினும், இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா நிராகரித்தார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பினர், சமூக ஊடகங்களில் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா குறித்து அவதுாறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கெஜ்ரிவாலை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ., தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கடந்த 14ம் தேதி விலகினார். அந்த மனுவை வேறு அமர்வுக்கு மாற்றினார்.
இதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தன் மீது அவதுாறு கருத்துக்களை பரப்பிய அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, ரவீந்தர் துதேஜா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால், ஆம் ஆத்மி நிர்வாகிகளான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உட்பட பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும், நான்கு வாரங்களுக்குள் தங்கள் விளக்கத்தை சமர்பிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதுதவிர, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு காரணமாக அமைந்த அவதுாறு பரப்பும் வகையிலான ஆவணங்களின் நகல்களைப் பாதுகாத்து வைக்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு