பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஜம்மு - காஷ்மீர் அரசு ஆலோசனை

8

ஸ்ரீநகர்: மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ஜம்மு - காஷ்மீரில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஆளும் தேசிய மாநாட்டு கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.

இங்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒமர் அரசு, பூரண மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான வரைவு தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கூறப்படுகிறது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் தன்வீர் சாதிக் கூறியுள்ளதாவது:

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, கலால் வருவாயை விட பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் தரப்பினரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மது விற்பனைக்கு விரைவில் முழு தடை விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட வரைவு இறுதிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில், மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement