எழும்பூர் ரயில் நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு ஒரே நேரத்தில் 184 கார், 130 பைக் நிறுத்த வசதி

1

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்த வசதி, நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு, ஒரே நேரத்தில், 184 கார்கள், 130 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில், அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணியர் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, 842 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2024 பிப்ரவரியில் பணிகள் துவங்கின. முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் நடைமேம்பாலம், நடைமேடை விரிவாக்கம், மேற்கூரை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

Tamil News
Tamil News

இந்த மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, காந்தி - இர்வின் சாலைப் பகுதியில், அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் வசதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள், தலா 3,442.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து மொத்தம், 122 நான்கு சக்கர வாகனங்கள், 68 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

மேலும், 2,842.13 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நான்காவது தளத்தில், 62 நான்கு சக்கர வாகனங்களும், 34 இருசக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். இந்த வசதியால் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறைக்கப்பட்டு, நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடையின்றி செல்ல முடியும்.

இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தில், 22 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், 'சிசிடிவி' கேமரா, தீயணைப்பு பாதுகாப்பு உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பயணி யரின் வசதிக்காகக் கட்டணக் கழிப்பறைகள், ஓட்டுனநகளுக்கான ஓய்வறைகள், 'ஸ்மார்ட் லாக்கர்' வசதிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ள ன.

இதேபோல், மற்றொரு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலும் தயாராகி வருகிறது.

இந்த பணிகள் முழுமையடையும்போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement