காரைக்கால் -பேரளம் ரயில்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது 

காரைக்கால்: காரைக்கால் –திருநள்ளாறு –பேரளம் அகல ரயில்பாதையில் 40ஆண்டுக்கு பிறகு பயணிகள் ரயில் நேற்று முதல் தனது சேவையை துவங்கியதால் பொதுமக்கள் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு –பேரளம் இடையே 23.5கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்த 1951ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை துவக்கப்பட்டது. காலப்போக்கில் போதிய வருவாய் இல்லாததால் கடந்த 1986ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய,மாநில அரசு பெரும் முயற்சியில் ரூ.320.64 கோடி மதிப்பில் காரைக்கால் பேரளம் அகலப்பாதை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மே.23ம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இருந்து ரயில் இயக்கப்படாமல் இருந்தது. நிலக்கரி ரயில் மட்டும் இயக்கப்பட்டது.

இதனால் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளர் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் இப்பாதையில் பயணிகள் ரயில்கள் சேவை துவங்கியது.

இதன்படி நேற்று காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12.45மணிக்கு புறப்பட்ட ரயில் திருநள்ளாறு ரயில்நிலையத்திற்கு மதியம் 1.05மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் ரயிலை திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளர் பயணிகள் நலச்சங்கம் மற்றும் பா.ஜ.,சார்பில் மலர்துாவி வரவேற்றனர்.பின்னர் திருநள்ளார் ரயில்  நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் பத்தக்குடி, அம்பகரத்துார்,பேரளம்,மயிலாடுதுறைக்கு ரயில் புறப்பட்டு சென்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் –பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவில்,அம்மையார் கோவில்,நாகூர் தர்கா,வேளாங்கண்ணி மாதா உள்ளிட்ட மும்மதஆலயங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தினம் ரயிலில் பயணிக்கலாம்.

Advertisement