பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: மத்திய கிழக்கு
நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை வழியான வணிக
கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டு, உலகளாவிய உர வினியோக சங்கிலியில் பெரிய
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் உர உற்பத்தியை அதிகரிக்க
நடவடிக்கை எடுக்கவில்லை. போர் சூழலை அறிந்து, வேளாண் உற்பத்திக்கு தேவையான
உரங்களை கணக்கிட்டு, முன்னரே இறக்குமதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
* விவசாயத்துக்கு உரங்களின் தேவை
அவசியம் தான்... ஆனா, இதுபோன்ற இக்கட்டான சூழலில், விவசாயிகள் இயற்கை
உரங்களுக்கு மாறுவதும் நல்லது!
***
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சுகாதார துறையில் முன்மாதிரி மாநிலமாக உள்ள தமிழகத்தில், பல் மருத்துவ துறை மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும், 400 பல் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் மருத்துவர் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
* இவங்களை எல்லாம் பணி நிரந்தரம் பண்ணுவோம்னு வாக்குறுதி தந்துட்டு ஏமாற்றியதும், தி.மு.க., அரசு வீட்டுக்கு போக ஒரு காரணம்!
-------
நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு: சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன், சினிமா துறையை வாழ வைக்க போராடியவர். சினிமா விழாக்களில் காரசாரமாக பேசுவார். அவரது தற்கொலை மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. வாழ்க்கையை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும்; தற்கொலை தீர்வு அல்ல. ராஜனிடம் பணம் கடன் வாங்கியவர்கள், அவரது குடும்பத்தினருக்கு திரும்ப தர வேண்டும்.
* ராஜனிடம் கடன் வாங்கியவங்க, மனசாட்சிப்படி நடந்துக்கிட்டால், அவரது ஆன்மா சாந்தியடையும்!
---------
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'விஜய் கிறிஸ்துவர் என்பதால், கிறிஸ்துவர் ஓட்டுகள் 80 சதவீதம், அவருக்கு போய் விட்டது. முஸ்லிம் ஓட்டுகளில், 60 சதவீதம் மட்டுமே எங்கள் கூட்டணிக்கு தக்க வைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் ஓட்டுகளிலும் சேதாரம் உள்ளது' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறுகிறார். அதாவது, மத ரீதியான ஓட்டுகளை குறி வைத்து இதுவரை வி.சி.க., - தி.மு.க., கூட்டணி இயங்கி வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறார்.
* சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெரும்பான்மையினரை அலட்சியப்படுத்தியதன் விளைவையும் இப்ப உணர்ந்திருப்பாரு!