மாநில வாலிபால் சாம்பியன்ஷிப்: இந்தியன் வங்கி அணி அபார வெற்றி

சென்னை: மாநில வாலிபால் போட்டியில், இந்தியன் வங்கி அணி அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு வாலிபால் சங்கம் ஆதரவுடன் 'அக்வா' நிறுவனம் சார்பில் மாநில அளவில் 55வது 'அக்வாடெக்ஸ்மோ' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, கோயம்புத்துார் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் எஸ்.டி.ஏ.டி, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை உட்பட மாநிலத்தின் சிறந்த அணிகள் போட்டியிடுகின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

முதல் லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி, டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி அணியை எதிர்த்து மோதியது. முதல் செட் தொடங்கியதுமே இரு அணிகளுக்கும் இடையே போட்டி அனல் பறந்தது. இரு அணிகளும் ஒவ்வொரு புள்ளிக்கும் பதிலடி தந்தன. முதல் செட் முடிவில் 30 - 28 என்ற புள்ளியில், இந்தியன் வங்கி அணி முன்னிலை பெற்றது.

கடும் போராட்டம் நிலவிய இரண்டாவது செட்டை, இந்தியன் வங்கி அணி 33 - 31 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது.

தொடர்ந்து, மூன்றாவது செட்டிலும் இந்தியன் வங்கி அணியின் கை ஓங்கவே, 25 - 17 என்ற கணக்கில் கைப்பற்றி 3 - 0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த போட்டியில் அக்வா பம்ப் அணி, தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி., அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் அக்வா பம்ப் அணி 25 - 17, 25 - 19, 23 - 25, 25 - 22 என்ற செட் புள்ளியில் தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement