ஒரே நாளில் 274 பேர்; எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை

1

காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில், 3 இந்தியர்கள் உட்பட 274 மலையேற்ற வீரர்கள் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.

நம் அண்டை நாடான நேபாளம் - திபெத் எல்லையில் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து, 29,032 அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட், உலகின் மிக உயரமான சிகரமாகும்.
இந்த சிகரத்தை மனிதர்கள் அடைவது அவ்வளவு எளிதல்ல. இந்நிலையில், நேபாளத்தின் தெற்குப் பாதை வழியாக, 3 இந்தியர்கள் உட்பட 274 மலையேற்ற வீரர் எவரெஸ்டை அடைந்து இமாலய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஒரே நாளில் இத்தனை பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது இதுவே முதல்முறை என நேபாள மலையேற்ற ஆப்பரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன், 2019 மே 22 ல் ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்தது.

இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கத்தில், எவரெஸ்ட் பாதையில் பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருந்ததால், மலையேற்றம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகரத்தின் கீழ் உள்ள பல்வேறு முகாம்களில் வீரர்கள் சாதகமான வானிலைக்காக காத்திருந்தனர்.

பிறகு வானிலை மிகவும் சீராகி, பனிப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால், முகாம்களில் காத்திருந்த வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிகரத்தை நோக்கி படையெடுத்தனர். நேபாளத்தைச் சேர்ந்த 150 வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 274 பேர் வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர்.

Advertisement