வானில் பயங்கர வெடிச்சத்தம் ஆடு, மாடுகள் அலறி ஓட்டம்

சாணார்பட்டி: சாணார்பட்டி, வடமதுரை பகுதிகளில் வானில் ஒலித்த பயங்கர வெடிச்சத்தத்தால், ஆடு, மாடுகள் அலறி யடித்து ஓட்டம் பிடித்தன.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, கோபால்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு, 40 முதல், 50 கி.மீ., சுற்றளவில் அடிக்கடி அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது.

ஒன்பது ஆண்டுகளாக இது தொடர்ந்தாலும், அரசு இதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

மக்களின் தொடர் கேள்விகளால், ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, பல்வேறு வதந்திகளும் பரவுகின்றன. அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

நேற்று காலை, 8:46 மணிக்கு கோபால்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை, செங்குறிச்சி சுற்றிய கிராமங்களில் வானில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால், கால்நடைகள் பயந்து ஓடின. வீடுகளில் இருந்தவர்கள், அதிர்ச்சியடைந்து வீதிகளுக்கு வந்தனர்.

அப்போது, சாணார்பட்டி பகுதியில், வானத்தில் வெடி வெடித்தது போல் வெண் புகை தோன்றி, அரை மணி நேரம் கழித்து மறைந்தது.

இதனால், பழமையான வீடுகள், கட்டடங்களில் பாதிப்பு ஏற்படுமோ என பலரும் அச்சமடைந்தனர். இதற்கான உரிய காரணம் தெரியாததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement