சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்

மாலுார்: டேக்கல் அருகே உள்ள ஒரு கல் குவாரியில், சட்ட விரோதமாக வெடி வைத்து, பாறைகள் தகர்த்த போது, நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கொப்பால் மாவட்டத்தை சார்ந்த சிரஞ்சீவி, 22, ராமு, 34, ஹேமந்தா, 28, ராஜு, 30 ஆகியோர், மாலுார் தாலுகா டேக்கல் அருகே கதிரேணகுப்பா என்ற கல்குவாரியில் சட்டவிரோதமாக, செவ்வாய்கிழமை அன்று கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாறையை பிளக்க வெடி வைத்த போது, நான்கு பேருக்கும் தலை, கால், கை, என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள், கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை, அரசின் போவி அபிவிருத்தி குழுமத் தலைவர் எம்.ராமப்பா நேற்று சந்தித்து விசாரித்தார்.

அவர் கூறியதாவது:

கதிரேனஹள்ளி மலையில் சட்ட விரோத கல் குவாரி பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்தகையோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரியில் சட்டப்படி செயல்பட எல்லா வாய்ப்புகளும் இருந்த போதிலும், சட்ட விரோதமாக செயல்படுவது தவறு.

குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும். சம்பவம் குறித்த அறிக்கையை சுரங்கத்துறை அதிகாரிகள், உடனடியாக மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கல் குவாரி தொழிலாளர்களுக்கு எந்த விதமான காப்பீடும், தொழிலாளர் அட்டைகளோ அல்லது முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, வழங்கப்படவில்லை.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, சுரங்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவம் குறித்து சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் உயர் அதிகாரிகளுடன் விவாதிக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.

சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை, தொழிலாளர்துறை உட்பட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காதது குறித்து வருந்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலார் மாவட்ட போவி அபிவிருத்தி குழும மேலாளர் விஜயலட்சுமி, போவி சமூக இளைஞர் மன்ற தலைவர் எஸ்.வி.லோகேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Advertisement