பெங்., விமான நிலையத்தில் 'சேலஞ்சர் 2026' ஒத்திகை

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது.

பாதுகாப்பு, செயல்பாட்டு தயார் நிலை, ஒருங்கிணைந்த நெருக்கடியை நிர்வகிப்பதற்காக, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, முழு அளவிலான அவசரகால தயார் நிலை பயிற்சியான 'சேலஞ்சர்' ஒத்திகை நடத்தப்படுகிறது.

டி.ஜி.சி.ஏ., எனும் சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் விதிமுறைகள் மற்றும் ஐ.சி.ஏ.ஓ., எனும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல்கள் படி, இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

இதன் மூலம், சிக்கலான அவசரகால சூழ்நிலையை உருவாக்கி, விமான நிலையத்தின் தயார் நிலை, பதில் நடவடிக்கை, பல்வேறு அமைப்புகள் இடையே ஒருங்கிணைப்பு திறன்கள் சோதிக்கப்பட்டன.

விமான போக்குவரத்து துறையை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் உட்பட ஏராளமான பணியாளர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

விமான நிறுவனங்கள், விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், மருத்துவர்கள், ராணுவ, துணை ராணுவ படைகள், குடிமை அமைப்பினர் பங்கேற்றனர்.

'சேலஞ்சர் 2026' என்ற பெயரில் ஒத்திகை நடந்தது. விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் உண்மையான விமான செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோதே, ஒத்திகை நடந்தது சிறப்பாக அமைந்தது.

அவசர கால மீட்பு குழுக்களுக்கு உடனடி வழிகாட்டுதலை வழங்க, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதே நேரத்தில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காயம் அடைந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஒத்திகையும் நடந்தது. இதில் செஞ்சிலுவை சங்கமும், மாநில பேரிடர் மீட்பு படையும் பங்கேற்றன.

விமான நிலைய நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹரிமரார் கூறியதாவது:

விமான நிலைய சூழல் அமைப்பு, நாளுக்கு நாள் விரிவடைகிறது. மேலும், சிக்கலானதாகவும் மாறி வருகிறது. எனவே, அவசர கால தயார் நிலையை தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டி உள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு விரைவாக பதிலளிக்கும் திறன் தேவைப்படுகிறது.

விமான நிலையத்தின் செயல்பாடுகள் நடக்கும்போதே இந்த ஒத்திகை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement