காங்., அமைச்சர்களுக்கான வரவேற்பை கோஷ்டி பூசலால் புறக்கணித்த தலைவர்கள்

சென்னை: காங்கிரஸ் அமைச்சர்களை வரவேற்க, சத்தியமூர்த்தி பவனில் காங்., முக்கிய தலைவர்கள் வராதது, அக்கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தியுள்ளது.

த.வெ.க., ஆட்சி அமைய ஆதரவு அளித்த காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை கொடுத்தார் முதல்வர் விஜய். அதன்படி, காங்கிரசின் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பின், காங்., தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு அவர்களை வரவேற்க, தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு தவிர, வேறு யாரும் வரவில்லை. வெளியூர்களை சேர்ந்த, சில தொண்டர்கள் மட்டும் இருந்தனர். அமைச்சர்கள் வரவேற்புக்காக, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பப்படவில்லை.

இதனிடையே, முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை ஒட்டி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் அங்கு நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின் காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறியதாவது:
காங்கிரஸ் 59 ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சி. ஆட்சியில் பங்கு பெற்றால்தான் மக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும்.

அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர், மாதம் ஒரு நாள் சத்தியமூர்த்தி பவனில் கட்சி தொண்டர்களை சந்தித்து, குறைகளை கேட்பர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய அமைச்சர்கள் அளித்த பேட்டி:
அமைச்சர் விஸ்வநாதன்: காமராஜரும், கக்கனும் அமர்ந்திருந்த அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். அவர்கள் வழியில் நாங்கள் நேர்மையாக பணியாற்றுவோம். காங்., தொண்டர்களுக்கு கடமையாற்றும் வாய்ப்பை கொடுத்த சோனியா, ராகுல், கார்கேவுக்கு நன்றி.

அமைச்சர் ராஜேஷ் குமார்: காமராஜரின் ஆட்சி அமைய வேண்டும் என காத்திருந்த காங்., தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி உள்ளது.

தொண்டர்கள் தான், இந்த அமைச்சர் பதவியை தந்துள்ளனர். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நாங்கள் பணியாற்றுவோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். மக்கள் பணிகளோடு, காங்.,கையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement