காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

12

மதுரை: த.வெ.க., ஆட்சியில் காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தலைமையில் இவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவே இவருக்கு இப் பதவி கிடைக்க வாய்ப்பாக அமைந்தது.

தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு ஒதுக்கப்பட்டது 28 தொகுதிகள். இதில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு, மதுரை மாவட்டம் மேலுாருக்கு மட்டும் மனுத்தாக்கலுக்கான கடைசி நாளுக்கு முதல் நாள் காலை வரை அறிவிக்கப்படவில்லை.

முதல்வராக இருந்த ஸ்டாலின் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் மதுரையின் 10 தொகுதி வேட்பாளர்களை அறி முகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் அவசரமாக மாலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான், இந்த விஸ்வநாதன். கடலுாரை சேர்ந்தவர்.

மேலுார் அ.தி.மு.க., வுக்கு சாதகமான தொகுதி. ஒரு பொதுத் தொகுதியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த விஸ்வநாதனை எப்படி வேட்பாளராக நிறுத்தலாம்' என காங்.,க்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டு, சில நிர்வாகிகள் எதிர்ப்பும் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அப்போதைய தி.மு.க., அமைச்சர் மூர்த்தி காங்., நிர்வாகிகளிடம் பேசி கட்சிக்குள் சமாதானம் ஏற்படுத்தினார்.

கடும்போட்டிக்கிடையில் 1058 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், விஸ்வ நாதன் வென்றார்.

விஸ்வநாதன், ஆரம்பத்தில் சிதம்பரம் ஆதரவாளராக இருந்தார். அப்போது காஞ்சிபுரம் எம்.பி.,யாக 2009 முதல் 2014 வரை பதவி வகித்தார். ஸ்டேட் வங்கிகளின் இயக்குநராகவும் பதவி வகித்தார். பின் தற்போதைய அகில இந்திய தலைவர் கார்கேவின் தீவிர ஆதரவாளராக மாறினார். கேரள மாநில காங்., பொறுப் பாளராக இருந்தார். தற்போது தெலுங்கானா காங்., பொறுப்பாளராகவும், கட்சியில் அகில இந்திய செயலாளராகவும் உள்ளார்.

கார்கே, ராகுல் உள்ளிட்ட அகில இந்திய தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாலும், கட்சி எம்.எல்.ஏ.,க்களில் சீனியர் என்பதாலும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

Advertisement