'முதல்' கோப்பை வென்றார் ரொனால்டோ * சவுதி புரோ லீக் கால்பந்தில்...

ரியாத்: சவுதி புரோ லீக் கால்பந்தில் 'முதல்' கோப்பை வென்றார் ரொனால்டோ.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. சிறந்த வீரருக்கான 'பால் டி ஆர்' விருதை ஐந்து முறை வென்றவர். கிளப் அரங்கில் கடந்த 2023 முதல் சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். சவுதி புரோ லீக் தொடரில் கடந்த 3 சீசனில் 2, 2, 3 வது இடம் பெற்றது அல் நாசர் அணி.
இம்முறை 33 போட்டி முடிவில் ரொனால்டோவின் அல் நாசர் (83 புள்ளி), அல் ஹிலால் (81) அணிகள் 'டாப்-2' இடத்தில் இருந்தன. நேற்று கடைசி சுற்று போட்டிகள் நடந்தன. ரியாத்தில் நடந்த போட்டியில் அல் நாசர், தமாக் அணிகள் மோதின. இதில் வென்றால் கோப்பை என்ற நிலையில், 4-1 என தமாக் அணியை வீழ்த்தியது.
அல் நாசர் அணிக்கு சாடியோ (34), கிங்ஸ்லே (52) தலா ஒரு கோல் அடிக்க, ரொனால்டோ (63, 81) இரண்டு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு போட்டியில் அல்ஹிலால் அணி 1-0 என அல் பஹ்யா அணியை வீழ்த்தியது.
முடிவில் அல் நாசர் அணி 86 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று, 11வது முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அல் நாசர் அணிக்கு ரொனால்டோ வந்த பின் வென்ற முதல் கோப்பை இது ஆனது.

Advertisement