அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!

5

நமது நிருபர்



தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் விஜய் டில்லிக்கு செல்கிறார். அவர் அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு.


மேலும், நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளுடன், டில்லியில் உள்ள அதிகார மையங்களை முதல்வர்கள் சந்தித்து வலியுறுத்துவர்.
அந்த வகையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் விஜய் டில்லிக்கு செல்கிறார்.

இதற்கான பணிகள், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துவங்கியுள்ளன. டில்லி செல்லும் விஜய் பிரதமர் மோடி, நிதியமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்திக்கிறார். இந்த பயணத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்காக, அவர் கோரிக்கை மனுக்களையும் தயார் செய்யும் பணியையும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் டில்லியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்கிறார்.

தன் அரசை ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளின் டில்லி அலுவலகங்களுக்கும் விஜய் சென்று, மா.கம்யூ., பொதுச்செயலர் பேபி, இ.கம்யூ., மூத்த தலைவர் டி.ராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் திருவள்ளூவர் சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார்.

Advertisement