288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு

2

பாரிஸ்: கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த வழக்கில், ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ரியோவில் இருந்து பாரிஸ் நோக்கி ஏர் பஸ் ஏ330 என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனி படிந்து பழுதடைந்தததே விபத்துக்கு காரணம் என்று ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இரு விமான நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2023ம் ஆண்டு கீழ் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், தொழில்நுட்பக் கோளாறுகளைத் சரிசெய்யத் தவறியது மற்றும் விமானிகளுக்கான பயிற்சிக் குறைபாடுகளே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2.51 கோடி என மொத்தம் ரூ.720 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே, ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸின் உயர்மட்ட நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்துள்ளன.

Advertisement