மாவட்ட விளையாட்டு மைதானம் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானம், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வசதிகள் உள்ளன. காலை – மாலை நடைபயிற்சி மேற்கொள்வோருக்காக நடைபாதை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நீச்சல் குளம், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. தற்போது, விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக, ‘இன்டோர்’ கிரிக்கெட், மாற்றுத்திறனாளிகள் உள்விளையாட்டரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருள்போஸ் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதிகளவில் விளையாட்டு வீரர்களை தயார்படுத்தி, அவர்களை தேசிய, சர்வதேச போட்டியாளர்களாக உருவாக்கவும், அதிகளவில் அரசு பணிகளில், விளையாட்டு வீரர்கள் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு ஒதுக்கீடு மூலம் இரண்டு பேர் அரசு பணியை பெற்றுள்ளனர். தற்போது இங்கு, ஓட்டப்பந்தயம், மல்யுத்தம் மற்றும் இறகு பந்துக்கான பயிற்சியாளர்கள் உள்ளனர். மற்ற விளையாட்டுக்கும் பயிற்சியாளர்களை நியமிக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், நீச்சல் குளம் புனரமைப்பு, உள்விளையாட்டு கிரிக்கெட் மைதானம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கான பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement