அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

திருப்பூர்: உடுமலை அரசு இசைப்பள்ளியில், குரல் இசை, தேவாரம், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், வயலின் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை துவங்குமென,  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கூறியதாவது: 

கலை பண்பாட்டு துறை சார்பில், உடுமலை அரசு இசைப்பள்ளியில், திறமையான ஆசிரியர்களை கொண்டு, இசை பயிற்சி அளிக்கப்படுகிறது.  ஆர்வமுள்ள, 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்கும், ஏழாம் வரை படித்தவர்கள், குரல் இசை, பரதம், தேவாரம், வயலின் பிரிவுகளில் சேரலாம். 

தவில், நாதசுரம் பயில, கல்வித்தகுதி அவசியம் இல்லை; ஆண் மாணவர்களுக்கு, பரதம் பயிற்சி மூன்று ஆண்டுகள் நடக்கும். ஆண்டுக்கு, 350 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை, மாதம் 1,000 ரூபாய் உதவி, இலவச தங்குமிட வசதி கிடைக்கும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள், ஐ.டி.ஐ. முடித்தவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை முடித்த, 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுவர். 

படிப்பு முடித்தவுடன் அவரவர் திறமைக்கேற்ப திரைத்துறை, சின்னத்திரையில் இசை அமைப்பாளராகவும், பாடகர்களாகவும், நடன கலைஞர்களாகவும் பணி வாய்ப்புகளை பெறலாம். ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களிலும், தனியார் பள்ளிகளிலும் அவரவர் தகுதியும் திறமைக்கேற்ப வேலை வாய்ப்பு படித்தவுடன் கிடைக்கும்.  இசைப் பள்ளியில் சேர விரும்புவோர், உடுமலையிலுள்ள இசைப்பள்ளியை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு, 95664 73769, 04252 227326  என்ற எண்களில் அணுகலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement