என் உழைப்பு வீண் போகவில்லை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் பெருமிதம்

10

சென்னை: 'சென்னை கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவி இருப்பது, என் உழைப்பு வீண் போகவில்லை என்பதை காட்டுகிறது' என, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது திரும்ப பெறப்பட்டதால், சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் விஜய்க்கும், நீதிமன்றங்களுக்கும் நன்றி. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் மிக சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

இதை முதல்வர் விஜய் நன்கு புரிந்து, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவர் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார். ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்து இருப்பதால், ஊடகங்களுக்கான ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருக்கும் என, நம்புகிறேன். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும்.

தி.மு.க.,வினர் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்டி உள்ளனர். கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவி இருப்பதால், என் உழைப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சம், பயம் நீங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement